இங்கிலாந்தில் பெய்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்களில், கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
சுமார் 800 ஆண்டுகள் பழமையான யார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நதியோரத்தில் இருந்த கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரு மாகாணங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மீட்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், சில பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை கடந்த சனிக்கிழமை ஒரேநாளில் பெய்துள்ளது, இதுவே வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று தெரிவித்தனர்.
ராணுவ வீரர்கள் படகுகளில் வீடு வீடாக சென்று வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.
சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு இங்கிலாந்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இயற்கையை வெல்ல யாராலும் முடியாது என்பது இங்கிலாந்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
-ஆர்.மார்ஷல்.
