சமஸ்கிருதம் நமது ஆன்மீக முயற்சிக்கு ஒரு புனித பாலமாக செயல்படும் தெய்வீக மொழியாகும் – குடியரசுத் துணைத் தலைவர்.

குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், சமஸ்கிருதம் தெய்வீக மொழி என்றும், நமது ஆன்மிகத் தேடலில், தெய்வீகத்தை இணைக்கும் புனிதப் பாலமாக அது செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், சமஸ்கிருதம் மனித நாகரிகத்திற்கான கலாச்சார நங்கூரம் என்று விவரித்தார். “இன்றையக் காலகட்டத்தில், சமஸ்கிருதம் அறிவார்ந்த கடுமை, ஆன்மீக அமைதி மற்றும் தனக்கும் உலகிற்கும் ஆழமான இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான ஆறுதலை வழங்குகிறது” என்று அவர் கூறினார்.

பட்டமளிப்பு விழாவிற்கு முன்பு, திரு தன்கர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். தனது அனுபவத்தை விவரித்த அவர், “திருப்பதியில் தான் ஒருவர் தெய்வீகம், ஆன்மீகம் மற்றும் மேன்மைக்கு மிக அருகில் வருகிறார். கோவிலில் தரிசனம் செய்த போது இதை அனுபவித்தேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன், அனைவருக்கும் பேரின்பத்தை நாடினேன்” என்று கூறினார்.

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கருடன் இணைந்து வெங்கடேஸ்வரரிடம் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “இன்று திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

சேஷாசலம் மலைகளின் அமைதியான சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் இந்த புனித இருப்பிடம் பாரதத்தின் வளமான ஆன்மீகப் பாரம்பரியத்தின் ஒளிரும் சின்னமாகும்.

எனது சக குடிமக்கள் அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தேன்”.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்திய அறிவு முறைகளின் மறுமலர்ச்சி மற்றும் பரப்புதலில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். சமஸ்கிருதத்தின் வளமான பாரம்பரியத்திற்கும் நவீன கல்வித் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், புதுமையான பாடத்திட்டங்களை உருவாக்கவும், பலதுறை ஆராய்ச்சியை வளர்க்கவும் அவர் அழைப்பு விடுத்தார். “சமஸ்கிருதம் என்னும் புனித மொழி நம்மை தெய்வீகத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், உலகைப் பற்றிய முழுமையான புரிதலை நோக்கிய பாதையை ஒளிரச் செய்யட்டும்” என்று குடியரசு துணைத் தலைவர்  மேலும் கூறினார். விலைமதிப்பற்ற பழங்கால கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் திரு தன்கர் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply