தான்சானியா அதிகாரிகளுக்கு திட்டம் மற்றும் இடர் மேலாண்மை குறித்த இரண்டு வார கால திறன் மேம்பாட்டு திட்டத்தை நல்லாட்சிக்கான தேசிய மையம் முசோரியில் தொடங்கியது.

தான்சானியா அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறையில் திட்டம் மற்றும் இடர் மேலாண்மை குறித்த இரண்டு வார கால திறன் மேம்பாட்டு திட்டத்தை நல்லாட்சிக்கான தேசிய மையம் முசோரியில் தொடங்கியது.

2024, மே 6 முதல் 17 வரை இப்பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கு  மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சாலைகள் முகமை, எரிசக்தி அமைச்சகம், திட்ட ஆணையம், தான்சானியா கட்டிட நிறுவனம், தான்சானியா ரயில்வே கழகம், வீட்டுவசதி முதலீடுகள், விரைவான போக்குவரத்து முகமை, மின் அரசு அதிகாரம், எரிசக்தி மற்றும் நீர் ஒழுங்குமுறை ஆணையம், அதிபர் அலுவலக பொது சேவை மேலாண்மை மற்றும் சிறந்த நிர்வாகம், பிராந்திய நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி, கால்நடை மற்றும் மீன்பிடி போன்ற தான்சானியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், அமைச்சகங்களைச் சேர்ந்த மொத்தம் 39 அதிகாரிகள் இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

மத்திய அரசின் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய மையம், தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் செயல் ஆராய்ச்சி, ஆய்வுகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபட உறுதிபூண்டுள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான திரு வி. ஸ்ரீனிவாஸ் தமது தொடக்க உரையின் போது, இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள அதிகாரிகளை வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும், திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்தும் அவர் பேசினார்.

மேலும் நிர்வாகம், செயல்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் தொழில்நுட்பத்தின் மாறக்கூடிய அம்சத்தை அவர் எடுத்துரைத்தார்.  தேசிய மின் சேவை வழங்கல் மதிப்பீடு, 2047-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், ஆதார் அட்டை, நிதித் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு வழிமுறைகள், நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பு போன்ற முன்மாதிரியான ஆளுமை மாதிரிகளை எடுத்துரைத்தார்.

திவாஹர்

Leave a Reply