வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 60 அடி உயரத்தில் கட்டப்பட்டுவரும் பிரமாண்டமான திரு இருதய ஆண்டவர் சிலை!

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விரிவாக்கப் பணிகளும், பல புதிய கட்டடங்களும் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தனியார் ஒருவரின் பங்களிப்புடன் 60 அடி உயரம் மற்றும் 15 அடி சுற்றளவில் இந்தியாவிலேயே மிக உயரமான பிரமாண்டமான திரு இருதய ஆண்டவர் சிலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதை வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமுடன் பார்த்து படமெடுத்து செல்கின்றனர்.

மேலும், பழைய வேளாங்கண்ணியில் அமைந்துள்ள திருத்தலத்திற்கு முன்பாக மாதா கிணறு அருகில் மலை தோற்றத்தில் ஒரு புதிய கெபி அமைக்கப்பட்டு, அதில் மாதா சொரூபமும், அதற்கும் கீழே திருப்பலி நிறைவேற்றும் பீடமும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆக வேளாங்கண்ணியில் திரும்பிய பக்கமெல்லாம் கோபுரங்களாகவே காட்சியளிக்கின்றன.

இதில் என்ன பிரச்சனை என்றால், இதுவரை வேளாங்கண்ணிக்கே வராதவர்கள் யாராவது இங்கு வந்தால், எது ஆதி திருத்தலம்? எது புதிய திருத்தலம்? என்று தெரியாமல் நிச்சயம் திகைத்து நின்று விடுவார்கள்.

-துரை திரவியம்.

Leave a Reply