தமிழக அரசு, பகுதிநேர ஆசிரியர்களை காலம் தாழ்த்தாமல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் .

தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மாதச்சம்பளம் போதுமானதல்ல.

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக 12,327 பகுதிநேர பகுதிநேர ஆசிரியர்கள் மாதச்சம்பளமாக ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக பெற்று வருகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆண்டிற்கு ஒரு மாதம் மே மாதம் மட்டும் வேலை கிடையாது, சம்பளம் கிடையாது. அதாவது மே மாதத்துக்கு சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதில்லை.

இதனால் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், மருத்துவ செலவு, உணவு பொருட்கள் போன்றவற்றிற்கு கடன் வாங்கி தவிக்கின்றனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் அவர்களின் பணிநிரந்தரம் சம்பந்தமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும்இன்னும் நிறைவேற்றப்படாதது நியாயமில்லை.

ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் பொருளாதாரத்தில் சிரமப்படும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களின் கஷ்டத்தை தமிழக அரசு மனிதநேயத்துடன் நினைத்து பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் சம்பளம் கூட உயர்த்தவில்லை.மேலும் பணிநிரந்தரம் செய்யப்பட்டு விடுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததை நம்பி காத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள்.2012 ஆம் ஆண்டில் இருந்து பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்ப்பார்பான பணிநிரந்தரம் தான் அவர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக காப்பாற்றும்.

எனவே தமிழக அரசு, 2012-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து, காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply