காடுகளின் முக்கியத்துவத்தை மறந்து மனித சமுதாயம் தவறு செய்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் இன்று (ஏப்ரல் 24, 2024) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்திய வனப் பணியின் (2022 பிரிவு) பயிற்சி அதிகாரிகள் இடையே குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார். காடுகளின் முக்கியத்துவத்தை மறந்து மனித சமுதாயம் தவறு செய்து வருகிறது என்று கூறிய அவர், காடுகள் உயிர்  அளிப்பவை என்று தெரிவித்தார். உண்மையில், காடுகள் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதாக குறிப்பிட்டார்.

மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சியின் காலமான மானுடவியல் பற்றி இன்று நாம் பேசுகிறோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த காலகட்டத்தில், வளர்ச்சியுடன் பேரழிவு விளைவுகளும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வளங்களின் நீடித்த தன்மையற்ற சுரண்டல் மனிதகுலத்தை வளர்ச்சியின் தரங்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார். பூமியின் வளங்களின் உரிமையாளர்கள் நாம் அல்ல என்றும், எனினும் நாம் அதன் அறங்காவலர்கள் என்பதைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். நமது முன்னுரிமைகள் மானுடத்தை மையமாகக் கொண்டதாகவும், சுற்றுச்சூழலை மையமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். உண்மையில், சுற்றுச்சூழலை மையமாகக் கொண்டால்தான் நாம் உண்மையிலேயே மானுடத்தின் மையமாக இருக்க முடியும் என்று அவர் கூறினார்.

உலகின் பல பகுதிகளில் வன வளங்கள் மிக விரைவாக அழிந்துள்ளதாக தெரிவித்த அவர், காடுகளை அழிப்பது என்பது ஒரு வகையில் மனித இனத்தை அழிப்பதாகும் என்று குறிப்பிட்டார். பூமியின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் இயற்கை அழகை பாதுகாப்பது மிக முக்கியமான பணியாகும் என்றும் அதை நாம் மிக விரைவாக செய்ய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.

காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் மூலம் மனித உயிர்களை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேதத்தை விரைவாக சரிசெய்ய முடியும். என்று அவர் தெரிவித்தார். உதாரணமாக, மியாவாக்கி முறை பல இடங்களில் பின்பற்றப்படுகிறது என்றும் காடு வளர்ப்புக்கு ஏற்ற பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட பகுதி சார்ந்த மர இனங்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு உதவும் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து நாட்டின் புவியியல் நிலைமைகளுக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.

சுற்றுச்சூழலுக்காக ஈடு இணையற்ற பணிகளை செய்த பல அதிகாரிகளை இந்திய வனப் பணி நாட்டிற்கு வழங்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஸ்ரீனிவாஸ், திரு சஞ்சய் குமார் சிங், திரு எஸ் மணிகண்டன் போன்ற ஐஎஃப்எஸ் அதிகாரிகள் கடமையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்றும் பயிற்சி அதிகாரிகள் இதுபோன்ற அதிகாரிகளை முன்மாதிரியாகவும், வழிகாட்டிகளாகவும் தங்களை உருவாக்கிக் கொண்டு அவர்கள் காட்டும் லட்சியங்களை பின்பற்றி முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் பழங்குடியின மக்களுடன் களத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்றும் அவர்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். பழங்குடி சமூகத்தின் நல்ல நடைமுறைகளிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அவர்கள் தங்கள் பொறுப்புகளை பொறுப்பேற்று ஒரு முன்மாதிரியாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply