88 மக்களவைத் தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன .

மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்தத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வானிலை இயல்பு நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதிக வெப்பத்தை சமாளிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நாளை (26.04.2024) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது.

அனைத்துக் கட்டங்களிலும் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து பொறுப்புடனும் பெருமையுடனும் பங்காற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பான சில முக்கிய தகவல்கள்

2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு 2024 ஏப்ரல் 26 ஆம் தேதி 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாறுபடும்.

இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கட்டத்தில் 15.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த வாக்காளர்களில் 8.08 கோடி பேர் ஆண்கள், 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 5,929 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள்.
34.8 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.
20 முதல் 29 வயதுக்குட்பட்ட 3.28 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த 2-ம் கட்டத் தேர்தலில் 1202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். (ஆண்கள் – 1098; பெண்கள்-102; மூன்றாம் பாலினத்தவர் – 02)
4553 பறக்கும் படைகள், 5731 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 1462 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதில் வாக்களிக்க, வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறைகள், சாய்வுதளம், சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தேதி ஆகியவற்றை இந்த இணையதள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் https://electoralsearch.eci.gov.in/
வாக்குச் சாவடிகளில் அடையாள சரிபார்ப்புக்காக வாக்காளர் அடையாள அட்டை (EPIC) தவிர 12 மாற்று ஆவணங்களையும் காண்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply