ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீசைலம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு திட்டப்பணிகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்தார். 43 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப்பணிகளுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் முழுமையாக நிதி அளித்திருந்தது.

 தேசிய புனித யாத்திரை  புத்துயிர் நடவடிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பிரஷாத் (PRASHAD) திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீசைலம் ஆலயத்தை உலகத்தரத்திலான வழிபாட்டுத்தலமாகவும், சிறந்த சுற்றுலா மையமாகவும் மாற்றும் நோக்கில் இதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி வட்ட அரங்கங்கள், ஒலி-ஒளி காட்சி அமைப்புகள், வாகன நிறுத்துமிடங்கள், சிறந்த உணவுக்கான வசதிகள், பரிசுப் பொருட்களுக்கான கடைகள், வங்கி வசதி மற்றும் ஏடிஎம் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்ற பல வசதிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷண் ரெட்டி, சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், ஆந்திர துணை முதலமைச்சர் திரு கோட்டு சத்யநாராயணா, ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி ரோஜா, ஆந்திர நிதியமைச்சர் திரு  புக்கணா ராஜேந்திர நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எம். பிரபாகரன்

Leave a Reply