10 லட்சம் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

10 லட்சம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

வேலைவாய்ப்பு பெற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், தன்தேராஸ்  வாழ்த்துக்களுடன் தொடங்கினார். “கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு பிரச்சாரங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு மேளா புதிய வடிவம் அளித்துள்ளது”, என்றார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு 75,000 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பணி நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறது என்று பிரதமர் கூறினார். “ஒரே நேரத்தில் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் ஒரு பாரம்பரியம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம், இதனால் திட்டப்பணிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கூட்டு மனோபாவம் துறைகளில் உருவாகிறது” என்று அவர் கூறினார். வரும் நாட்களிலும், தேர்வர்கள் அவ்வப்போது அரசிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெறுவார்கள். “தேசிய ஜனநாயகக் கூட்டணி  மற்றும் பாஜக ஆளும் பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதேபோன்ற மேளாக்களை ஏற்பாடு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியாவின் உறுதியை நிறைவேற்றுவதற்காக, நாம் தற்சார்பு இந்தியா என்ற பாதையில் முன்னேறி வருகிறோம் என்று புதிதாக நியமிக்கப்பட்டவர்களிடம் பிரதமர் கூறினார். இந்தியாவை தன்னம்பிக்கை பாதைக்கு கொண்டு செல்வதில் புதுமையாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். அனைவரது முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தப் பயணத்தில் அனைவரின் முயற்சிகளும் முக்கியமானவை என்றும், அனைத்து முக்கியமான வசதிகளும் அனைவரையும் சென்றடையும் போதுதான் இந்த உணர்வு சாத்தியமாகும் என்றும் கூறினார்.

லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களுக்கான தேர்வுப் பணியை சில மாதங்களில் முடித்து, பணி நியமனக் கடிதங்களை வழங்குவது, கடந்த 7-8 ஆண்டுகளில் அரசு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது என்றார். “இன்று, வேலை கலாச்சாரம் மாறி வருகிறது,” என்று அவர் கூறினார். “நமது கர்மயோகிகளின் முயற்சியால் அரசுத் துறைகளின் செயல்திறன் அதிகரித்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார். அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பது சிரமமான செயலாக இருந்த நாட்களை அவர் நினைவு கூர்ந்தார். மத்திய அரசின் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் சுய சான்றொப்பம் மற்றும் நேர்காணலை ரத்து செய்தல் போன்ற தமது ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இளைஞர்களுக்கு உதவியுள்ளன என்றார்.

இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 7-8 ஆண்டுகளில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களின் மகத்தான தன்மையை ஒப்புக்கொண்ட பிரதமர், எதிர்மறையான விளைவுகளை இந்தியாவால் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். “கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் தடைகளை ஏற்படுத்திய அந்த குறைபாடுகளை நாங்கள் அகற்றியதால் இது சாத்தியமானது” என்று அவர் தெரிவித்தார்.

விவசாயம், தனியார் துறை மற்றும் எம்எஸ்எம்இ போன்ற அதிக வேலை வாய்ப்புள்ள துறைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஒளிமயமான எதிர்காலத்திற்காக இந்தியாவின் இளைஞர்களை திறமையாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இன்று நாங்கள் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் தொழில்களின் தேவைக்கேற்ப இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு பெரிய பிரச்சாரம் நடந்து வருகிறது”, என்றார். திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கௌசல் விகாஸ் மையங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். ட்ரோன் கொள்கையை தாராளமயமாக்குதல், விண்வெளிக் கொள்கையைத் தனியாருக்கு இடமளிப்பது, முத்ரா திட்டத்தின் கீழ் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் போன்ற முன்முயற்சிகள் செயல்முறையை மேலும் முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். இதற்கு முன் இந்த அளவிலான சுயதொழில் திட்டம் மாவட்டங்களில்  செயல்படுத்தப்படவில்லை, என்றார் அவர்.

சுயஉதவிக் குழுக்களைத் தவிர, கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு காதி மற்றும் கிராமியத் தொழில் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். நாட்டிலேயே முதன்முறையாக காதி மற்றும் கிராமத் தொழில்களின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்களில் 4 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. “நமது ஏராளமான சகோதரிகளுக்கு இதில் பெரும் பங்கு உள்ளது,” என்றும் அவர் கூறினார்

ஸ்டார்ட்-அப் இந்தியா பிரச்சாரம், உலகம் முழுவதும் உள்ள நாட்டின் இளைஞர்களின் திறனை நிலைநாட்டியுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இதேபோல், தொற்றுநோய்களின் போது எம்எஸ்எம்இ-க்கள் பெரிய அளவில் ஆதரிக்கப்பட்டன, சுமார் 1.5 கோடி வேலைகளைப் பாதுகாத்தன. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் என்பது நாட்டில் உள்ள 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

21 ஆம் நூற்றாண்டில் நாட்டிற்கு மிகவும் லட்சியமான திட்டம் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் தற்சார்பு இந்தியா ஆகும். இறக்குமதியாளராக இருந்து இன்று நாடு வளர்ந்து வரும் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக பல விஷயங்களில் நகர்கிறது. இன்று உலக மையமாக இந்தியா வேகமாக முன்னேறி வரும் இதுபோன்ற பல துறைகள் உள்ளன. சாதனைகளை முறியடிக்கும் ஏற்றுமதிகளும் வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் காட்டுவதாக அவர் கூறினார்.

“உற்பத்தி மற்றும் சுற்றுலாத் துறைகள் இரண்டிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளதால், அரசு அத்துறைகளில் விரிவாக செயல்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து, தங்கள் தொழிற்சாலைகளை நிறுவி, உலகின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான செயல்முறைகளும் எளிமைப்படுத்தப்படுகின்றன. உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிஎல்ஐ திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது. அதிக உற்பத்தி, அதிக ஊக்கம், அதுதான் இந்தியாவின் கொள்கை. அதன் முடிவுகள் இன்று பல துறைகளில் ஏற்கனவே தெரிகின்றன. வேலை வாய்ப்பு தொடர்பான அரசின்  கொள்கைகள் எந்தளவுக்கு நிலைமையை மேம்படுத்தியுள்ளன என்பதை கடந்த ஆண்டுகளில் வரும் இபிஎஃப்ஓ எனப்படும் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவு காட்டுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த தரவுகளின்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுமார் 17 லட்சம் பேர் இபிஎஃப்ஓ-வில் சேர்ந்து, இப்போது நாட்டின் முறையான பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். சுமார் 8 லட்சம் பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் அம்சத்தை பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், ரயில் பாதைகளை மாற்றுதல் மற்றும் மின்மயமாக்குதல் போன்ற பணிகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், புதிய நீர்வழிப் பாதைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன” என்று திரு மோடி  கூறினார்.

நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒரே நேரத்தில் பல முனைகளில் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். உள்கட்டமைப்பு தொடர்பாக நூறு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இலக்குடன் இந்திய அரசு செயல்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.  உள்ளூர் மட்டத்தில் இளைஞர்களுக்கு இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்தும் பணிகளை விளக்கிய பிரதமர், நவீன உள்கட்டமைப்புக்காக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் சுற்றுலாத் துறைக்கு புதிய ஆற்றலை வழங்குவதுடன், தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக குறிப்பிட்டார்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் தேசத்தின் இளைஞர்களிடம் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். விடுதலையின் அமிர்த காலத்தில்,  வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் உந்து சக்தியாக அவர்கள் உள்ளனர். புதிய பணி நியமனம் பெற்றவர்கள் அலுவலகங்களின் கதவுகள் வழியாக உள்ளே செல்லும்போது அவர்களின் கடமைப் பாதையை எப்போதும் மனதில் கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தினார். “நாட்டின் குடிமக்களின் சேவைக்காக நீங்கள் நியமிக்கப்படுகிறீர்கள்” என்று பிரதமர் கூறினார். 21 ஆம் நூற்றாண்டில் இந்திய அரசு வேலை என்பது வசதியான வாழ்க்கை என்பதுடன் இல்லாமல், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் மக்களுக்குச் சரியான நேரத்தில் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு மற்றும் பொன்னான வாய்ப்பாக இருக்க வேண்டும் என்று கூறி  பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply