குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஏக்தா நகருக்கும், சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டிற்கும் வருகை தந்த அனைவரையும் பிரதமர் வரவேற்றார். இந்தியா அடுத்த 25 ஆண்டுகளுக்கான புதிய இலக்கை நிர்ணயம் செய்யும் வேளையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் முக்கியத்துவம் பற்றிப் பேசிய பிரதமர், ஏக்தா நகரின் முழுமையான வளர்ச்சிக்கு காடுகள், நீர் பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் நமது பழங்குடி சகோதர, சகோதரிகள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளும் போது சுற்றுச்சூழல் யாத்திரைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, வாழ்வு இயக்கம் ஆகியவை குறித்து விளக்கிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றங்களை எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல், உலகின் பிற நாடுகளுக்கும் வழிகாட்டுகிறது என்று குறிப்பிட்டார். “இன்றைய புதிய இந்தியா, புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது” என்று பிரதமர் கூறினார். இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் என்றும், அதன் சுற்றுச்சூழலையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார். “நமது காடுகளின் பரப்பளவு அதிகரித்து உள்ளதுடன், ஈரநிலங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன” என்று பிரதமர் மேலும் கூறினார்.

நம்நாடு தனது கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றியதன் காரணமாக இன்று உலகமே இந்தியாவுடன் இணைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். “கிர் சிங்கங்கள், புலிகள், யானைகள், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற மிருகங்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தைகள் மீண்டும் வந்ததில் இருந்து புதிய உற்சாகம் திரும்பியுள்ளது” என்று பிரதமர் மேலும் கூறினார்.

2070 ஆம் ஆண்டுக்கான நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதமர், நாட்டின் கவனம் பசுமை வளர்ச்சி மற்றும் வேளாண் துறை சார்ந்த பணிகளில் உள்ளது என்று கூறினார். இயற்கையுடன் சமநிலையை பேண வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த இலக்குகளை அடைவதில் மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். மாநிலங்களில் முடிந்தவரை சுற்றுப் பொருளாதாரத்தை ஊக்குவிக்குமாறு அனைத்து சுற்றுச்சூழல் அமைச்சர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார். இது திடக்கழிவு மேலாண்மை பிரச்சாரத்தை கணிசமாக வலுப்படுத்தும் என்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பிடியில் இருந்து நம்மை விடுவிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் துறைகளின் பங்களிப்பை தொடர்ந்து வலியுறுத்திய பிரதமர், இந்த விஷயத்தை வெறும் கட்டுப்படுத்தும் வகையில் பார்க்கக் கூடாது என்றார். நீண்ட காலமாக சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஒரு கட்டுப்பாட்டாளராக உருவெடுத்தது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், பிரதமர், “சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பங்கு ஒரு ஒழுங்குபடுத்துபவராக இருப்பதை விட சுற்றுச்சூழலை ஊக்குவிப்பவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார். வாகனங்களை அழிக்கும் ஸ்கிராப்பிங் கொள்கை, மற்றும் எத்தனால் கலத்தல் போன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்தும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.

நிலத்தடி நீர் பிரச்சினைகளை எடுத்துக் காட்டிய பிரதமர், தண்ணீர் அதிகம் உள்ள மாநிலங்களும் தற்போது தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன என்றார். ரசாயனமற்ற இயற்கை விவசாயம், அமிர்த நீர்நிலைகள் மற்றும் நீர் பாதுகாப்பு போன்ற சவால்கள் தனிப்பட்ட துறைகளுக்கு மட்டுமானதல்ல. சுற்றுச்சூழல் துறையும் அவற்றை சமமான அழுத்தமான சவாலாக கருத வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். “சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் பணியாற்றுவது மிகவும் முக்கியமானது. சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் கண்ணோட்டம் மாறும்போது, இயற்கையும் பயனடையும் என்று நான் நம்புகிறேன்’’ என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தப் பணி வெறும் தகவல் துறை அல்லது கல்வித் துறையுடன் தொடர்புடையது மட்டும் அல்ல என்பதை வலியுறுத்திய பிரதமர், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றொரு முக்கிய அம்சமாகும் என்றார். “நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையில் அனுபவம் சார்ந்த கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்” என்று திரு மோடி மேலும் கூறினார். இந்த பிரச்சாரத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம் வழிநடத்த வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதன் மூலம் குழந்தைகள் மத்தியில் உயிர் பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதைகளையும் விதைக்க முடியும். “நமது கடலோரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கடல்சார் சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். நமது குழந்தைகளையும், வருங்கால சந்ததியினரையும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திறன் உடையவர்களாக மாற்ற வேண்டும்” என்று பிரதமர் மேலும் கூறினார். “ஜெய் அனுசந்தன் மந்திரத்தைப் பின்பற்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புதிய நடவடிக்கைகளுக்கு நமது மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்கள் முதன்மையான முன்னுரிமை அளிக்க வேண்டும்”. “காடுகளில் உள்ள நிலைமைகள் பற்றிய ஆராய்ச்சியும் மிகவும் முக்கியமானது” என்று திரு மோடி மேலும் கூறினார்.

மேற்கத்திய நாடுகளில் ஏற்படும் காட்டுத் தீயின் ஆபத்து பற்றி குறிப்பிட்ட பிரதமர், காட்டுத்தீ காரணமாக உலகளாவிய விளைவுகளில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாக இருக்கலாம், ஆனால் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் காட்டுத் தீயை அணைக்கும் செயல்முறையானது தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நமது வனக் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், காட்டுத் தீயை அணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டிய அவர், நவீன உள்கட்டமைப்புகளின் வளர்ச்சி மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தடைபடுவதாகக் கூறினார். 1961 ஆம் ஆண்டு பண்டிட் நேருவால் தொடங்கப்பட்ட சர்தார் சரோவர் அணையைப் பிரதமர் எடுத்துக்காட்டினார். சுற்றுச்சூழலின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட சதிகளால் இதன் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய பல தசாப்தங்கள் தேவைப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க, பல்வேறு உலகளாவிய அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்று, நகர்ப்புற நக்சல் குழுக்கள் தங்கள் வலிமையைக் காட்டுகின்றன. அணையின் உயரத்தை அதிகரிக்க உலக வங்கி கடன் வழங்க மறுத்ததால், இதுபோன்றவர்களின் சதித்திட்டங்களையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “இந்த சதிகளை முறியடிக்க சிறிது காலம் பிடித்தது, ஆனால் குஜராத் மக்கள் வெற்றி பெற்று வந்தனர். இந்த அணை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் என்று வர்ணிக்கப்பட்டது, இன்று அதே அணை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஏற்றதாக மாறியுள்ளது” என்று பிரதமர் மேலும் கூறினார். ஒவ்வொருவரும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நகர்ப்புற நக்சல் குழுக்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். சுற்றுச்சூழல் அனுமதிக்கான 6000க்கும் மேற்பட்ட முன்மொழிவுகளும், வனத்துறை அனுமதிக்கான 6500 விண்ணப்பங்களும் மாநிலங்களிடம் நிலுவையில் இருப்பதாக பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். “ஒவ்வொரு சரியான முன்மொழிவையும் விரைவில் ஏற்பதற்கு, மாநிலங்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிலுவை காரணமாக , பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முடங்கும் என யூகிக்க முடியும்,” என்றார். பணிச்சூழலில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார், இதன் விளைவாக நிலுவைத் தொகை குறைந்து, அனுமதி பெறும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துகிறது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில், நாங்கள் விதிகளை கவனித்து, அந்தப் பகுதி மக்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று பிரதமர் மேலும் கூறினார். “இது பொருளாதாரம் மற்றும் சூழலியல் ஆகிய இரண்டிற்கும் ஒரு வெற்றிகரமான சூழ்நிலை” என்று அவர் கூறினார். “சுற்றுச்சூழல் அனுமதி பெறும் நடைமுறையை தேவையில்லாமல் கடினமாக்குவதன் மூலம், எளிதாக வாழ்வதற்கும், எளிதாக தொழில் செய்வதற்கும் எந்த தடையும் ஏற்படக்கூடாது என்பதே நமது முயற்சியாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி எவ்வளவு வேகமாக கிடைக்கிறதோ, அவ்வளவு வேகமாக வளர்ச்சியும் நடைபெறும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’’ என்றார் அவர்.

சில வாரங்களுக்கு முன்பு தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட தில்லியில் உள்ள பிரகதி மைதான சுரங்கப்பாதையை பிரதமர் உதாரணம் காட்டினார். “இந்தச் சுரங்கப்பாதையால் தில்லி மக்கள் நெரிசலில் சிக்கித் தவிப்பது குறைந்துள்ளது. பிரகதி மைதான சுரங்கப்பாதையை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 55 லட்சம் லிட்டர் எரிபொருளை சேமிக்க உதவும்” என்று அவர் மேலும் கூறினார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 13 ஆயிரம் டன் கார்பன் வெளியேற்றம் குறையும், இது 6 லட்சத்துக்கும் அதிகமான மரங்களுக்கு சமம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “மேம்பாலங்கள், சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள் அல்லது ரயில்வே திட்டங்களாக இருந்தாலும், அவற்றின் கட்டுமானமானது கார்பன் வெளியேற்றத்தை சமமாக குறைக்க உதவுகிறது. சுற்றுச்சூழல் அனுமதியின் போது, இந்த கோணத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது” என்று மோடி கூறினார்.

சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து வகையான அனுமதிகளுக்கும் ஒற்றைச் சாளர முறையான பரிவர்தன் வலைதளத்தை பயன்படுத்துவதைப் பிரதமர் வலியுறுத்தினார், அதே நேரத்தில் அனுமதிகளைப் பெறுவதற்கான அவசரத்தைக் குறைப்பதில் அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலியுறுத்தினார். “8 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற 600 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்ட இடத்தில், இன்று 75 நாட்கள் மட்டுமே ஆகிறது” என்று பிரதமர் மேலும் கூறினார்.

பிரதமரின் விரைவு சக்தி தேசிய வரைவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து பல திட்டங்கள் வேகம் பெற்றுள்ள நிலையில், உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் விரைவு சக்தி தேசிய வரைவுத்திட்டம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த கருவியாகும். பேரிடரை எதிர்க்கும் உள்கட்டமைப்பு வசதிகளின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என்று திரு மோடி கூறினார். “மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் இணைந்து பசுமை தொழில்துறை பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும்” என்று பிரதமர் மேலும் கூறினார்.

சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக மட்டும் இல்லாமல், மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஒரு சிறந்த ஊடகம் என்றும் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். “ஏக்தா நகரில் நீங்கள் கற்றுக்கொள்ள, பார்க்க, செயல்படுத்த நிறைய இருப்பதைக் காணலாம். குஜராத்தின் கோடிக்கணக்கான மக்களுக்கு அமிர்தத்தை வழங்கும் சர்தார் சரோவர் அணை இங்கேயே உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார், “சர்தார் சாஹேப்பின் மிகப்பெரிய சிலை, ஒற்றுமையின் உறுதிமொழியைக் கடைப்பிடிக்க நம்மைத் தூண்டுகிறது’’ என அவர் கூறினார்.

கேவாடியா, ஏக்தா நகரில் உள்ள கற்றல் வாய்ப்புகளை சுட்டிக்காட்டிய பிரதமர், சூழலியல் மற்றும் பொருளாதாரத்தின் மேம்பாடு பற்றி விரிவாக பேசினார். சுற்றுச்சூழலை வலுப்படுத்துதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உயிர் பன்முகத்தன்மை ஆகியவை சுற்றுச்சூழல் சுற்றுலாவை அதிகரிக்க ஒரு ஊடகமாக இருப்பதை நன்கு அறியலாம். நமது பழங்குடியின சகோதர சகோதரிகளின் செல்வத்துடன் காடுகளின் செல்வம் எவ்வாறு உயர்கிறது என்பதை இங்கே குறிப்பிடலாம் என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு பூபேந்திர படேல், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வகையில், பன்முக அணுகுமுறை மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டை நீக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான மாநில செயல் திட்டங்கள் போன்ற விஷயங்களில் சிறந்த கொள்கைகளை வகுப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மேலும் ஒருங்கிணைப்பை உருவாக்கவும் மாநாடு கூட்டப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, காடுகளின் பரப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக பாழ்பட்ட நிலத்தை மீட்டெடுப்பது மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இது கவனம் செலுத்துகிறது.

செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் மாநாட்டில் வாழ்க்கை, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் (மாசுகளை குறைப்பதற்கான காலநிலை மாற்றத்திற்கான மாநில செயல் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை தாக்கங்களுக்கு ஏற்ப) ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். பரிவேஷ் (ஒருங்கிணைந்த பசுமை அனுமதிகளுக்கான ஒற்றை சாளர அமைப்பு); வன மேலாண்மை; மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு; வனவிலங்கு மேலாண்மை; பிளாஸ்டிக் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளுடன் ஆறு கருப்பொருள் அமர்வுகள் இதில் நடைபெறும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply