காமராஜரின் வாழ்க்கையும், வரலாற்றுச் சாதனைகளும்….! -காமாட்சி “கருப்பு காந்தி” ஆன கதை.

பெருந்தலைவர் காமராஜர்.

இன்று (ஜீலை 15) பெருந்தலைவர் காமராஜர் 116-வது பிறந்த நாள், நாடு முழுவதும் பெயரளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

காமராஜரின் இலட்சியங்களையும், அவர் இந்நாட்டிற்காக செய்த தியாகங்களையும் வார்த்தைகளில் மட்டுமல்ல, அன்றாட நடைமுறை வாழ்க்கையிலும் யார் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்கள்தான் நல்ல மனிதர்களாகவும், சிறந்த தலைவர்களாகவும் விளங்க முடியும்.

அந்த வகையில் காமராஜரின் வாழ்க்கையையும், அவரது வரலாற்று சாதனைகளையும், நமது வருங்கால தலைமுறையினருக்கு நினைவூட்டுவது நமது அடிப்படை கடமை என்று கருதுகின்றோம். அதற்கான முழு தகுதியும், யோக்கிதையும் நமக்கும் இருக்கிறது என்று முழுமையாக நம்புகின்றோம்.

ஏனென்றால், வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம். அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜரும், நமக்கெல்லாம் தலைச்சிறந்த பாடமாக விளங்குகின்றார். “பாடம்” என்றாலே பதப்படுத்திப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரின் பார்வைக்கு கொண்டுச் செல்வது என்ற செயல்முறையை குறிக்கும்.

காமராஜர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் குலதெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

அவரது தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.

தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.

சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார், இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார்.

அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு, அரசியலிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16-ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.

இராஜாஜியின் தலைமையில் 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காக காமராஜர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார்.

விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ.வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார்.

1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும், நேராகச் சென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவியில் இருந்துக்கொண்டு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.

மீண்டும் 1942-ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றார்.

காமராஜர் சிறந்த பேச்சாளரும், நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.

1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது, காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு, தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.

1953-க்குப் பிறகு இராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம்.

அப்போது தமிழகம் சென்னை ராஜ்ஜியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது.

மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சியின் காரணமாக காமராஜர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கினார்.

இந்நிலையில், குலக்கல்வித் திட்டத்தால் இராஜாஜியின் செல்வாக்கு வேகமாகக் சரிந்துக் கொண்டு இருந்தது.

அச்சமயம், அதாவது அக்டோபர் 1, 1953-ல் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக, ஆந்திரா தனியாக பிரிந்தது. இதனால் தமிழ்நாடு பரப்பளவு சுருங்கிப் போனது.

இந்த காலக்கட்டத்தில் காங்கிரசின் உள்ளேயே இராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கியது.

இராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்ப்பதற்காக, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம். நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும், தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த உள்ளடி வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.

ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதன் விளைவாக 1953, தமிழ்ப்புத்தாண்டு அன்று காமராஜர் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் 8 நபர்கள் மட்டும்தான் அமைச்சர்களாக இருந்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் ஆகிய இருவரையுமே தனது அமைச்சரவையில் காமராஜர் சேர்த்துக்கொண்டார்.

காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள்.

1952 தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும், அக்கட்சி சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. “தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன்” என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.

அடுத்து, காமராஜர் அமைச்சரவையில் இன்னொரு அதிசயம் என்ன தெரியுமா? ஆதி திராவிடர் (பறையர்) இனத்தைச் சேர்ந்த பரமேசுவரன் என்பவரை, அறநிலையத் துறை அமைச்சராக நியமித்தார். இவர் இரட்டைமலை சீனிவாசனின் பேரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காமராஜர் தமிழக முதல்வராக பதவியேற்றவுடன், இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது.

1920-ல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இத்திட்டமே 1960-களில் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்பு, எம்.ஜி. ராமச்சந்திரனால் 1980-களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

அதன் பலனாகப் பிரித்தானியர் காலத்தில் 7 விழுக்காடாக இருந்த பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சிக் காலத்தில் 37 விழுக்காடாக உயர்ந்தது. பள்ளிகளில் வேலை நாட்கள் 180 -ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

காமராஜர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், அதன் பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.

சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான் தொடங்கப்பட்டது.

காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.

அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தித் திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராஜரால் கட்டப்பட்ட மாத்தூர் “தொட்டிப் பாலம்” ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

பாரத மிகு மின் நிறுவனம்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.

மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம். 

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை.

நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை.

கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை.

மேட்டூர் காகிதத் தொழிற்சாலை.

மேலும், குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.

இப்படி ஒன்பது ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்து எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றார். இதனால் இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கிங் மேக்கர் (அரசரை உருவாக்குபவர்), பெருந்தலைவர் என்று மக்களால் புகழப்பட்டார். இவரை “கருப்பு காந்தி” என்றும் மக்கள் அன்போடு அழைத்தனர்.

பதவியைவிடத் தேசப்பணியும், கட்சிப் பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும், குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் ‘காமராஜர் திட்டம்’ ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் ஜவர்ஹலால் நேருவிடம் சொன்னார். அதை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார்.

இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, அப்பொறுப்பினை 2, அக்டோபர் 1963 பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு, காமராஜர் டெல்லி சென்றார். அக்டோபர் 9, அக்டோபர் 1963 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார்.

இப்படி மனிதருள் புனிதராகவும், மகத்தான தலைவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரை, 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அவரது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில், பெ.சீனிவாசன் என்பவரால் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.

அதன்பின் நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969 -ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றி பெற்றார்.

காமராஜருக்கு, இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து காமராஜர் மிகுந்த கவலை கொண்டிருந்தார். இந்நிலையில், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி. காந்தி பிறந்த நாள் அன்று, மதிய உறக்கத்திற்குப் பின்னர் காமராஜரின் உயிர் பிரிந்தது.

பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அவர் பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர, வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு அசையும் மற்றும் அசையா சொத்துக்களோ அவரிடம் இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

அந்த மாபெரும் மகத்தான தலைவனுக்குதான் இன்று 116-வது பிறந்த நாள்! மறைந்த பிறகும் கூட மக்களோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply