திருச்சியில் சக்தி மகளிர் இயக்கம் சார்பில் நாளை (ஜீன்23) சர்வதேச விதவைகள் தின பேரணி!

உலகம் முழுவதும் கணவனை இழந்து ஆதரவின்றி தவிக்கும் விதவை பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜீன் 23-ம் தேதியினை சர்வதேச விதவைகள் தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

இந்நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான விதவைகள் (கைம்பெண்கள்) சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா.சபை கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும்.

சர்வதேச விதவைகள் தினம் அறிவிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, உலகத் தலைவர்கள் ஐ.நா.சபையில் பேசியதின் அடிப்படையில், காபூன் நாட்டின் ம‌றைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்‌‌வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3-வது குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.

அதன் அடிப்படையில் ஆண்டு தோறும் ஜீன் 23 ம் தேதி “சர்வதேச விதவைகள் தினம்” உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை நினைவு கூறும் வகையிலும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வறுமையில் வாடும் விதவைப் பெண்களின் நிலைக் குறித்தும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தியும், செர்வைட் சமூக பணி மையம், சக்தி மகளிர் இயக்கம் மற்றும் புது விடியல் விதவைப் பெண்கள் இயக்கத்தின் சார்பில் நாளை (ஜீன் 23) காலை 10 மணியளவில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணி தொடங்கி கீழ அம்பிகாபுரம் செர்வைட் சமூக பணி மைய வளாகம் வரை சென்றடைய இருக்கிறது. அதன்பின் பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான விதவை பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply