கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் கோபிநாத். இவரிடம் கார் டிரைவராக தின்னூரை சேர்ந்த சிவாஜி வேலைப்பார்த்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் இவர் வீட்டில் இருந்தார்.
அப்போது சிலர் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து சென்றனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் சிவாஜி வராததால் பதட்டம் அடைந்த அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இன்று (20.02.2013) அதிகாலை 3 மணியளவில் ஓசூர்-பாகலூர் சாலை மில்லத் நகர் அருகே தலை துண்டித்த நிலையில் சிவாஜி பிணமாக கிடந்தார். சிவாஜியின் உடலை பார்த்து மனைவி கதறி அழுதார்.
சிவாஜியின் நண்பர்கள் அண்ணாமலை, சீனன். கடந்த 1999-ம் ஆண்டு பாகலூர் மில்லத்நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம், சிவாஜி கண் முன்னே நடந்ததாக கூறப்படுகிறது. வழக்கில், முதல் சாட்சியாக சிவாஜி சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று (20.02.2013) கிருஷ்ணகிரி செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து சிவாஜி இன்று கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இருந்தார். இந்நிலையில், மர்ம ஆசாமிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிவாஜி எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.