திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிதாசன் நகர் 3-வது தெருவை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் வீட்டின் வாசலின் முன்பு இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை வீசி சென்றுள்ளனர்.
காலையில் அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, அந்த குழந்தையை மீட்டு காட்டூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர் அந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல அலுவலக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குழந்தையை வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றனர்? குழந்தைக்கு சொந்தக்காரர் யார்? என விசாரணை செய்து வருகின்றனர்.
-ஆர்.சிராசுதீன்.
