தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வெள்ளி மற்றும் ரூபி விழா கொண்டாட்டங்களின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சிபி ராதாகிருஷ்ணன் இன்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சாஸ்த்ரா கல்வி நிறுவனம் திகழ்வதாகக் குறிப்பிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அது ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் கல்விக் கொள்கைகள் புரட்சிகரமானவை என்றும், முற்போக்குத் தன்மையுடையது என்றும் திரு சிபி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். மழலையர் கல்வி முதல் முனைவர் பட்டம் வரையிலான அனைத்து நிலைகளிலும் கல்வி முன்னேற்றத்திற்குத் தேசியக் கல்விக்கொள்கை 2020 ஒரு வழிகாட்டும் தூணாக அமைந்துள்ளது என்று கூறினார்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, பிரதமரின் ஆராய்ச்சி உதவித்தொகை, பிரதமரின் வித்யா லட்சுமி உள்ளிட்ட முக்கிய முன்முயற்சிகள் நாட்டின் உயர்கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் இயற்றப்பட்ட பொதுத்தேர்வுகள் (முறையற்ற நடைமுறைகளை தடுத்தல்) திருத்த மசோதா குறித்து குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இச்சட்டம் பொதுத்தேர்வு முறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இந்திய இளைஞர்களுக்கு நியாயமான வெளிப்படையான நடைமுறையை உறுதி செய்வதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.
உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை தற்போதுள்ள 30 சதவீதத்திலிருந்து, 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கு நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் உற்பத்தி, சேவைத் துறைகள் வாயிலாக சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இறையாண்மை கொண்ட தொழில்நுட்பத் திறன்களை வளர்க்கக்கூடிய ஒரு தற்சார்புச் சூழலை மத்திய அரசு உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
திவாஹர்
