அபராஜிதா – பரங் லா மலையேற்றப் பயணம் நாட்டின் பெண் சக்தியின் துணிச்சல், உறுதிப்பாடு வளர்ந்துவரும் திறன்களுக்கு சான்றாக அமைந்துள்ளது!- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

தேசிய மாணவர் படையின் சாகச முயற்சியாக அபராஜிதா – பரங் லா 2026 என்ற உயர் மலைப்பகுதிகளுக்கு பெண்கள் மேற்கொள்ளும் நீண்ட மலையேற்றப் பயணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் இன்று (18 ஆகஸ்ட் 2026) தொடங்கி வைத்தார்.

இமயமலையின் மிகவும் சவால்மிக்கதாக உள்ள உயரமான மலைப் பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த மலையேற்றப் பயணம், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஸ்பிடி பள்ளத்தாக்கையும் லடாக்கின் சங்தாங் பகுதியையும் இணைக்கும் 5,578 மீட்டர் (அதாவது 18,300 அடி) உயரம் கொண்ட பரங் லா கணவாய் வழியாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மகளிர் மலையேற்றப் பயணத்தை முப்படைகளைச் சேர்ந்த மூன்று பெண் அதிகாரிகள் வழிநடத்துகின்றனர். இந்த மலையேற்றப் பயணத்தில் சரியாக 19 வயதுடைய 28 பெண் வீராங்கணைகள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் மிகக் குறைந்த வயதுடைய வீராங்கணைக்கு 16.5 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சவாலான உயர்மலைப் பகுதியில் மலையேற்றப் பயணத்தில் இளம் பெண்களின் பங்கேற்பு நாட்டிலுள்ள பெண்களின் துணிச்சல், மனஉறுதி, வளர்ந்துவரும் திறன்களுக்கான வலுவான சான்றாக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், துணைப் பணியாளர்கள் அடங்கிய இந்தக்குழு, இமயமலையின் தொலைதூர பகுதிகள், சவாலான நிலப்பரப்புகள் வழியாக 250 கிலோமீட்டர் தொலைவிலான மலையேற்றப் பயணத்தை 30 நாட்களில் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பாதை கிப்பர், டும்லா, தால்தக், போங்ரோஜென், பரங் லா கணவாய், டாக் கர்சோங், நோர்பு, சும்டோ, கியாங்டோம், கோர்சோக் ஆகிய இடங்களை உள்ளடக்கியுள்ளது.

உயரமான மலைப்பகுதிகள், பாலைவனங்கள், பனிப்பாறைகள், நதிப் பள்ளத்தாக்குகள் வழியாகச் செல்லும் இந்தப் பயணத்தை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கு தனது வாழத்துகளை தெரிவித்துக்கொள்வதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply