கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை!- வைகோ கண்டனம்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தின் ஹானூர் தாலுகாவில் மரியமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊர் காவிரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இன்று அதிகாலை தோமையார்பாளையம் மற்றும் சாக்யா குறுவட்ட வன அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்றுள்ளனர்.

தோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் காட்டுக்குள் மேச்சலுக்கு போன தங்கள் மாடுகளை தேடி சென்று உள்ளனர். அவர்கள் மீது மான் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

கர்நாடக வனத்துறையினரின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஜகன்னாததொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகனான அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதா° (வயது-48) என்பவர் காயமடைந்துள்ளார்.

மரியமங்கலம் ஊரை அடுத்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததாகவும் அதனால் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கர்நாடக வனத்துறையினர் கூறுகின்றனர்.

“வேட்டையில் ஈடுபட்டவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தன. இது ஒரு என்கவுன்டர் சம்பவம். “என கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. கடும் கண்டனத்துக்குரியது.

மான் வேட்டையாட சென்றார்கள் என்று காரணம் கற்பித்து மூன்று தமிழர்களின் உயிரை பறித்துப் பச்சை படுகொலை நடத்தியுள்ள கர்நாடக மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேய்ச்சலுக்கு போன மாடுகளை தேடி வனப்பகுதிக்குள் சென்ற அப்பாவித் தமிழர்களை சுட்டுக் கொன்ற வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களை கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும்.

உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகையையும் கர்நாடக மாநில அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply