அரசியலில் குற்ற பின்னணி உள்ளவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 2004 -ஆம் ஆண்டு 24 சதவீதமாகவும், 2009 -ஆம் ஆண்டு 30 சதவீதமாகவும், 2014 -ஆம் ஆண்டு 34 சதவீதமாகவும், 2019 -ஆம் ஆண்டு 43 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும், பெரும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
குற்ற பின்னணி உள்ளவர்களின் ஆதிக்கம் பாராளுமன்றத்தில் மட்டும் இல்லை! இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சிகள் வரை ஆழமாக வேருன்றியுள்ளது.
இப்படிபட்ட நபர்கள் எப்படி தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள்? இதையும் ஆராய வேண்டும். குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்களில் பெரும்பாலனோர் பணக்காரர்களாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அதிகம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி வந்தது? என்று ஆராய்ந்தால், ‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மாறிவிடும்’.
இவர்கள் அனைவரும் மக்கள் செல்வாக்கினால் வாக்குகளை பெறவில்லை. மாறாக இவர்களிடம் இருக்கும் பணம் இவர்களின் வெற்றியை தீர்மானிக்கிறது. தேர்தல் சமயத்தில் இவர்கள் வாரி வீசும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் இவர்களது குற்றப் பின்னனியை திரைப்போட்டு மறைத்து விடுகிறது.
இதுபோன்ற நபர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் தவிர்க்க முடியாத சக்தியாக வேருன்றி இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் முழுநேர தொழிலாக (வணிகமாக) ஆகிவிட்டது. இவர்களிடம் தேச சேவையோ, மக்கள் நலனோ கடுகளவும் எதிர்பார்க்க இயலாது.
இந்நிலையில், இதுபோன்ற குற்ற பின்னணி உள்ளவர்களின் முகத்திரையை கிழிக்க உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் (13.02.2020) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆம், வேட்பாளர்களாக அறிவித்த 48 மணி நேரத்திற்குள் குற்றப் பின்னணி உள்ளவர்களின் விபரங்களை வலைதளம், பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், அத்துடன் குற்றப் பின்னணி உள்ளவர் வேட்பாளராக ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும், அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
Hon’ble Mr. Justice R.F. Nariman.
Hon’ble Mr. Justice Shripathi Ravindra Bhat.
Loading...
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நடைமுறைபடுத்த வேண்டும் என்று, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
Loading...
“சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி நக்கினால் இனிக்காது”
எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை, அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையமும் மதித்து நடக்க வேண்டும்.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை, வாக்காளர்கள் அறவே புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்களாட்சி மலரும்.
-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Great content! Super high-quality! Keep it up! 🙂
Ithu varaverkkathakkathu.
Hands up to Honourable Justice Mr. NARIMAN
AND
Honourable Justice Mr. Shripathi Ravindra Bhat.