|
மதிமுக பொது செயலாளர் வைகோவின் ஊரான கலிங்கப்பட்டியில், டாஸ்மாக் கடையை மதிமுகவினர் அடித்து உடைத்ததால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள் தலைமையில், 01.08.2015 அன்று போராட்டம் நடைப்பெற்றது. இந்நிலையில், கலிங்கப்பட்டியில் இன்று (02.08.2015) மதுவிலக்கு போராட்டத்தில் வைகோ ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடையை மதிமுக தொண்டர்கள் அடித்து உடைத்து மதுபான பாட்டில்களை ஒன்று கூட விடாமல் தூக்கி வந்து சாலையில் வீசி உடைத்தனர். அப்போது போலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அச்சமயம் மதிமுக கட்சித் தொண்டர் ஒருவர் கல்லை எடுத்து காவல்துறையினர் மீது எறிந்தார். அத்தொண்டரை வைகோ கடுமையாக கண்டித்தார், வைகோ உத்தரவின் பேரில் கல் எறிந்த நபரை பிடித்து மதிமுகவினர் அடித்தனர். மேலும், வைகோ உள்ளிட்ட போராட்டக்காரர்களை கைதாக போலிசார் கூறினர். ஆனால், வைகோ அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தார். இந்நிலையில் பொது மக்கள் மீது போலிசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது வைகோ மீதும் கண்ணீர் புகை குண்டுகளை போலிசார் வீசினர். இதனால் வைகோ ஆவேசமடைந்தார். இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் பொது மக்கள், போலிசார் மற்றும் பத்திரிகையளர்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாமளவன் போராட்டம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று வைகோவை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டமாக உள்ளது. போலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கலிங்கப்பட்டியில் உள்ள பிரச்சனைக்குரிய அந்த டாஸ்மாக் கடையை இன்று திறக்காமல் இருந்திருந்தால் இந்த கலவரம் நிச்சயம் நடந்திருக்காது. காவல்துறையின் கவனக்குறைவும், மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமும்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். இவ்விசயத்தில் உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது. இச்சம்பவம் தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. -கே.மாதவன்.
|
