மொரீஷியஸ் தீவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் ஆகியோரை சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தனது முதல் அரசுமுறைப் பயணமாக நேற்று 2024, மார்ச் 11 மொரீஷியஸ் சென்றடைந்தார். சர் சீவூசாகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜக்நாத், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மொரீஷியஸ் மூத்த பிரமுகர்கள் முழு அரசு மரியாதையுடன் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

அன்றைய தினத்தின் முதல் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு, மொரீஷியஸ் அதிபர் திரு. பிருத்விராஜ்சிங் ரூபுனை அரசு மாளிகையான லீ ரெடுயிட்டில் சந்தித்தார். தனித்தன்மை வாய்ந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-மொரீஷியஸ் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். கடந்த ஆண்டு மாநில இல்லத்தின் மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகள் தோட்டத்தையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.

பின்னர், பாம்பிளவுஸ் சேர் சீவசாகுர் ராம்கூலம் தாவரவியல் பூங்காவிற்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சேர் சீவசாகுர் ராம்கூலம் மற்றும் சேர் அனிரூத் ஜக்நாத் ஆகியோரின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாலையில் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் குடியரசுத் தலைவரை வரவேற்று அவரை கௌரவிக்கும் வகையில் விருந்து அளித்தார்.

விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், சுதந்திரம் பெற்ற குறுகிய காலத்தில், மொரீஷியஸ் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், பன்முகத்தன்மையின் அடையாளமாகவும், வளமான நாடாகவும், மதிப்புமிக்க சர்வதேச நிதி மையமாகவும், செழிப்பான சுற்றுலாத் தலமாகவும், மிக முக்கியமாக உலகின் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகளிலும் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது என்று கூறினார். “மொரீஷியஸ் அதிசயமாக” பொருளாதாரத்தை மாற்றிய தொலைநோக்கு பார்வைக் கொண்ட மொரீஷியஸ் தேச நிர்மாணிப்பாளர்கள் ஆப்பிரிக்காவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் உத்வேகம் அளிக்கின்றனர் என்று அவர் பாராட்டினார்.

மொரீஷியஸில் தங்களது சகோதர, சகோதரிகளின் வெற்றியால் இந்தியர்கள் பெருமிதம் கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார். நமது இரு அரசுகளும் ஒருவருக்கொருவர் முன்னுரிமை அளித்து, இந்த உறவில் முதலீடு செய்வதால், சமீபத்திய ஆண்டுகளில் நமது இருதரப்பு உறவுகளில் விரைவான முன்னேற்றம் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

மொரீஷியஸுக்கு ஒரு புதிய சிறப்பு ஏற்பாட்டையும் அவர் அறிவித்தார். இதன் கீழ், 7-வது தலைமுறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொரீஷியர்கள் இப்போது இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமைக்கு தகுதி பெறுவார்கள் – இது பல இளைய மொரீஷியஸ் மக்கள் தங்கள் மூதாதையர்களின் நிலத்துடன் மீண்டும் இணைக்க உதவும்.

வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், மொரீஷியஸ் போன்ற நெருங்கிய கூட்டாளிகளை நம்முடன் தொடர்ந்து இணைத்துக் கொள்வோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். “வசுதைவ குடும்பகம்” மற்றும் “சர்வஜன சுகின பவந்து” ஆகிய முக்கிய மாண்புகளைப் பின்பற்றி, உலக அமைதி மற்றும் செழிப்புக்கான ஆதாரமாக இந்தியா தொடர்ந்து இருக்கும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply