தமிழக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 12 மணி நேர வேலை சம்பந்தமான மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று 12 மணி நேர வேலை சம்பந்தமாக மசோதா நிறைவேற்றப்பட்டது ஏற்புடையதல்ல.

காரணம் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி என்றால் தான் அவர்களின் உடல்நலனுக்கும் நல்லது, வேலையும் சுமூகமாக முடியும்.

அது மட்டுமல்ல 8 மணி நேர வேலை என்பதை உலக அளவில் தொழிலாளர்கள் போராடி பெற்றதால் தான் மே தினமே கொண்டாடப்படுகிறது.

அதாவது தொழிலாளர்களின் வேலை, உழைப்பு, மன நலம் ஆகியவற்றிற்கு ஏற்ப வேலை நேரம் அமைய வேண்டும் என்பது தான் தொழிலாளர்களின் எண்ணமாகும்.

அப்படி இருக்கும் போது தொழிலாளர்களுக்கு எதிராக
தமிழக சட்டப்பேரவையில் இம்மசோதாவை நிறைவேற்றியிருப்பது நியாயமற்றது. மேலும் பொது மக்களும் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர்.

குறிப்பாக தமிழக அரசின் எதிர்க்கட்சியினரையும் தாண்டி ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே இந்த மசோதாவை எதிர்ப்பது ஆட்சியாளர்களின் தொழிலாளர் விரோதப் போக்கை எடுத்துக்காட்டுகிறது.

மே தினம் வரும் வேளையில், தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் செய்தியை வெளியிட வேண்டுமே தவிர தொழிலாளர்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவது தமிழக அரசுக்கு உகந்ததல்ல.

எனவே தமிழக அரசு, 12 மணி நேர வேலை சம்பந்தமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply