நிலக்கரி அமைச்சகம் செயல்திறன் வங்கி உத்தரவாத திருத்தத்தில் தளர்வு அளித்துள்ளது.

நிலக்கரி அமைச்சகம் நவம்பர் 3, 2022 அன்று 141 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தின் 5-வது சுற்றின் இரண்டாவது நடவடிக்கைகள் மற்றும் 6வது நடவடிக்கையைத் தொடங்கியது. தொழில்துறையினரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, எளிதாக தொழில் புரிவதை ஊக்குவிப்பதற்காக, அந்தந்த நிலக்கரிச் சுரங்கங்களுக்கு சுரங்கத் திறப்பு அனுமதி வழங்கப்பட்டவுடன், செயல்திறன் வங்கி உத்தரவாதத்தில் (பிபிஜி) முதல் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சகம் முடிவு செய்தது.

ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தின் விதிகளின்படி, வெற்றிகரமாக ஏலம் விடப்பட்ட ஒவ்வொரு நிலக்கரி சுரங்கத்திற்கும் சமர்ப்பிக்கப்படும் செயல்திறன் வங்கி உத்தரவாதம் (PBG), ஆண்டு தொடக்கத்தில் ஏப்ரல் மாதத்திற்கான தேசிய நிலக்கரி குறியீட்டின் (NCI) அடிப்படையில் ஆண்டுதோறும் திருத்தப்படும். . 2020 ஆம் ஆண்டில் முதல் வணிக நிலக்கரிச் சுரங்க ஏலங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து என்சிஐ எனப்படும் இந்தக் குறியீடு இரட்டிப்பாகி இருக்கிறது என்பதால், செயல்திறன் வங்கி உத்தரவாதத் திருத்த விதிகளில் தளர்வுகளை வழங்க வேண்டும் என நிலக்கரித் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தனர். என்சிஐ குறியீட்டின் அதிகரிப்பு வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு கணிசமான நிதிச்சுமைக்கு வழிவகுத்தது. ஏனெனில் சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன. இது சுரங்க செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது இந்த முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முயற்சியானது நிலக்கரிச் சுரங்கங்களைச் செயல்படுத்தும் போது ஏலதாரர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வணிக நிலக்கரிச் சுரங்கங்களின் ஏலத்தில் ஏலதாரர்களின் பங்கேற்பை மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாகவும், நடந்துகொண்டிருக்கும் ஏலத்தில் இந்தத் திருத்தத்தைச் செயல்படுத்துவதற்காகவும், அமைச்சகம் ஏலத்துக்கான காலக்கெடுவை ஜனவரி 13, 2023-ல் இருந்து ஜனவரி 30, 2023 வரை நீட்டித்துள்ளது.

திவாஹர்

Leave a Reply