வாரணாசியில் ஜனவரி 13ம் தேதி உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலான எம்வி கங்கா -ஐ பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸ்-ஐ ஜனவரி 13ம் தேதி காலை 10.30 மணிக்கு  காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன், கூடார நகரத்தையும் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ. 1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

எம்வி கங்கா விலாஸ்                  

எம்வி கங்கா விலாஸ் நதிப்பயண கப்பல்  தனது பயணத்தை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள்  பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக பங்களாதேஷ் சென்றடையும். இந்தியா மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் உள்ள 27 நதி அமைப்புகளை இந்த கப்பல் கடந்து செல்ல  உள்ளது.  மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பல், சொகுசு வசதிகளுடன் 36 சுற்றுலா பயணிகளின் தாங்கும் திறன் கொண்டதாக திகழ்கிறது.   இந்த கப்பலின் முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் முழுமையாக பயணிக்கின்றனர்.

எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல்  நாட்டின் சிறந்த  திறனை எடுத்துரைக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் 51 நாட்கள் பயணத்தின் போது, உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதிக்கரைகள், பீகாரின் பாட்னா, ஜார்க்கண்ட்டின் சாஹிபஞ்ச், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, பங்களாதேஷின் டாக்கா, அசாமின் குவாஹத்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணம், சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை தருவதுடன், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கும்.

 நதி வழியிலான சொகுசு கப்பல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பிரதமரின் நோக்கத்திற்கு ஏற்ப, நதி பயண சொகுசு கப்பலுக்கான வாய்ப்பை இத்திட்டம், பெரிய அளவில் ஊக்குவிக்கும் என்பதுடன், இந்த சேவை தொடங்கப்படுவதன் மூலம் இந்தியாவுக்கு நதி சொகுசு கப்பல் சுற்றுலாவில் புதிய சகாப்தத்தை உருவாக்கும்.

வாரணாசியில் கூடார நகரம்

கூடார நகரம் என்ற தத்துவம் கங்கை நதிக்கரைப் பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இந்த திட்டம், நதிக்கரைப்பகுதிக்கு எதிரில் உள்ள நகர பகுதியில் உருவாக்கப்பட்டு, அங்கு தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வாரணாசியின் சுற்றுலா மேம்படும்.  இந்த திட்டம் வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பொதுத்துறை, தனியார் துறைகளின் பங்களிப்பில்  செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூடார நகரத்திற்கு சுற்றுலா பயணிகள் பல்வேறு நதிக்கரையிலிருந்து படகுகள் மூலம் செல்வார்கள். இந்த கூடார நகரம், அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். மழைக்காலங்களில் நதிநீர் மட்டம் உயரும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் 3 மாதங்கள் மட்டும் இந்த நகரம் செயல்பாட்டில் இருக்காது.

உள்நாட்டு நீர்வழித்திட்டங்கள்

மேற்கு வங்க மாநிலம் ஹால்டியாவில் பன்னோக்கு சரக்கு முனையத்தையும் பிரதமர் திறந்துவைக்கிறார்.  நீர் வழித்தட வளர்ச்சித்திட்டத்தின் கீழ்  செயல்படுத்தப்பட்டுள்ள ஹால்டியா  பன்னோக்கு சரக்கு முனையம்,  ஆண்டுக்கு 30 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாகும்.

சைத்பூர், ஜோக்காபூர், காசிப்பூர் மாவட்டத்தின் சமானியா, உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தின் கன்ஸ்பூர் ஆகிய இடங்களில் 4 சமுதாய மிதவை மேடைகளையும் பிரதமர் திறந்துவைக்கிறார். திகா, நக்தா தியாரா, பார்ஹ், பாட்னா மாவட்டத்தின் பனாப்பூர், சமஸ்திப்பூர் மாவட்டத்தின் ஹசன்பூர் ஆகிய 5 இடங்களில் புதிய சமுதாய மிதவை மேடைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிப்பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட சமுதாய மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சமுதாய மிதவை மேடைகள், சிறு விவசாயிகள், மீன்பிடி அமைப்புகள், அமைப்புச்சாரா பண்ணை உற்பத்தி நிறுவனங்கள், தோட்டக்கலை துறையினர், மலர்சாகுபடி செய்வோர், கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு எளிய போக்குவரத்து தீர்வுகளை வழங்கி கங்கை நதிக்கரையின் உள்ளடங்கிய பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை வலுவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வடகிழக்கு பகுதிக்கான கடல்சார் திறன் மேம்பாட்டு மையத்தை குவாஹத்தியில் பிரதமர் தொடங்கிவைக்கிறார். இது வடகிழக்கு பகுதியில்  சரக்கு போக்குவரத்து துறையை வலுப்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகளவில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தவிர, குவாஹத்தியில் பாண்டு முனையத்தில்  ஒரு கப்பல் பழுதுபார்க்கும் நிலையம் மற்றும் உயர்த்தப்பட்ட சாலை அமைப்புக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். பாண்டு முனையத்தில் அமைக்கப்படும் கப்பல் பழுதுபார்க்கும் நிலையம், மிகப்பெரிய அளவில் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அமையும். அப்பகுதியில் கப்பல் பழுதானால்அவை கொல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டு திரும்பி வர ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகும் சூழ்நிலை தவிர்க்கப்பட்டு, நேரம் சேமிக்கப்படும். இது தவிர கப்பல் போக்குவரத்துக்கான மிகப் பெரிய அளவிலான பொருள் சேதம் தவிர்க்கப்பட்டு பணமும் சேமிக்கப்படும். பாண்டு முனையத்தை இணைக்கும் பிரத்யேக சாலை, தேசிய நெடுஞ்சாலை 27 உடன்                                      24 மணி நேர இணைப்பை ஏற்படுத்தும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply