2040 ஆம் ஆண்டுக்குள் உலகத் தேவையில் 25%-ஐ இந்தியா வழங்கும், 2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை எட்டும்: ஹர்தீப் சிங் பூரி.

எரிபொருள் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தியா, எரிபொருள் விநியோகத்தை பல்வகைப்படுத்துதல், அகழ்வு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல், வாயு அடிப்படையிலான பொருளாதாரம் மூலம் எரிசக்தி தேவையை அணுகுதல், பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்னணு வாகனங்கள் என்ற 4 அம்ச உத்தியை மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை 2006-07 ஆம் ஆண்டில் 27 ஆக இருந்தது. அது தற்போது 2021-22-ல் 39 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொலம்பியா, ரஷ்யா, லிபியா, கபோன், மத்திய கினியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது. அதே சமயம் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் உறவுகளையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

இந்தியாவில் 2021 டிசம்பருக்கும், 2022 டிசம்பருக்கும் இடையிலான காலகட்டத்தில் டீசல் விலை 3 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளது. அதே சமயம் அமெரிக்காவில் 34 சதவீதமும், கனடாவில் 36 சதவீதமும், ஸ்பெனியில் 25 சதவீதமும், பிரிட்டனில் 10 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. 2022 மே மற்றும் 2021 நவம்பர் மாதத்தில் பிரதமர் அறிவித்த மத்திய கலால் வரி குறைப்பு காரணமாக பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.13-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.15-ம் குறைந்ததாகவும், பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன என்றும் அவர் கூறினார்.

2013-14 ஆம் ஆண்டில் 1.53 சதவீதமாக இருந்த பெட்ரோலில் எத்தனால் கலப்பு, 2022 ஆம் ஆண்டில் 10.17 சதவீதமாக அதிகரித்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலப்பை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பானிபட் (ஹரியானா), பத்தின்டா (பஞ்சாப்), பர்ஹா (ஒடிசா), நுமலிகார் (அசாம்), தாவன்ஹரே (கர்நாடகா) ஆகிய 5 இடங்களில் 2-ம் தலைமுறை எத்தனால் சுத்திகரிப்பு நிலையங்களை அரசு அமைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை உருவாக்குவதற்காக தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் மத்திய அரசு ரூ.19,744 கோடியை முதலீடு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 22,000 மாற்று எரிபொருள் சில்லரை நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.

திவாஹர்

Leave a Reply