36-வது சர்வதேச பேரளவு ஒருங்கிணைப்பு சுற்றுகள் வடிவமைப்பு மற்றும் 22-வது உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் மாநாட்டில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உரை.

36-வது சர்வதேச பேரளவு ஒருங்கிணைப்பு சுற்றுகள் வடிவமைப்பு  (விஎல்எஸ்ஐ) மற்றும் 22-வது உட்பொதிந்த அமைப்புகள்  மாநாட்டில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்  காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

விஎல்எஸ்ஐ வடிவமைப்புகள் மற்றும் எம்பெடெட் சிஸ்டம்ஸ்  துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து பேசிய அவர், 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் குறிப்பிட்ட அளவிலேயே இருந்ததாக குறிப்பிட்டார். இந்த துறையில் குறைவான நிறுவனங்களே அப்போது இருந்தன என்று குறிப்பிட்டார். ஆனால், தற்போது அந்த சூழல் மாறி தொழில்நுட்பமும், புதுமைக் கண்டுபிடிப்புகளும் பரவலாக அதிகரித்துள்ளன என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கல் உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான சாதனங்கள் மற்றும் திறன் வாய்ந்த நபர்களுக்கான தேவையும்  அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார். விநியோக சங்கிலியும், மறு வடிவமைப்பு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  தகவல் தொழில்நுட்பத்தில் வன்பொருட்கள் மற்றும் சர்வர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் இது பொன்னான நேரம் இது என்று திரு ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் 2000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம். பிரபாகரன்

Leave a Reply