உலக அளவில் கொவிட் 19 பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து பொதுச் சுகாதார அமைப்பின் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை தயார் நிலையைக் குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.

சில நாடுகளில் கொவிட் 19 பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து பொது சுகாதார அமைப்பின்  கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை தயார் நிலைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா,  இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவாருடன் இணைந்து ஆய்வு செய்தார்.  இக்கூட்டத்தில் நித்திஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலக அளவில் நிலவி வரும் கொவிட் 19 சூழ்நிலை மற்றும் உள்நாட்டு நிலைமைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.  சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை   அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதார அமைச்சர்,கொவிட் 19-ன் புதிய  உருமாற்றத்தால் எதிர்வரும் பண்டிகையையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொவிட் 19 பரவல் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்றும் எனவே கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.  கொவிட் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களை டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் தினசரி கொவிட் பரவல் சராசரி தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறிய மத்திய சுகாதார அமைச்சர், 2022 டிசம்பர் 19, வார இறுதியில் தினசரி பாதிப்பு சராசரியாக 158 என்று குறைந்துள்ளதாகக்  குறிப்பிட்டார் எனினும் உலக அளவில் தினசரி சராசரி அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அவர் கடந்த 6 வாரங்களில் 2022 டிசம்பர் 19 வார இறுதியில் உலக அளவில் தினசரி கொவிட் சராசரி பாதிப்பு 5.9 லட்சமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply