இந்தியா- இங்கிலாந்து பயிலரங்கில் இரு நாடுகளின் சுற்றுச்சூழல் இலக்குகளுக்கான அர்ப்பணிப்பு எடுத்துரைக்கப்பட்டது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும், இங்கிலாந்தின் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் நிறுவனத்தின் இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து புதுதில்லியில் சுற்றுச்ச்சூழல் தொடர்பான இரண்டு நாள் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் சுற்றுச்சூழல் தொடர்பான சென்சார் கருவிகளை உருவாக்குவதில் இருநாடுகளின் ஆராய்ச்சி  நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்  நிறுவனங்கள்  இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்சார் கருவிகள் தொடர்பான இந்த பயிலரங்குகளில் கலந்துகொண்டு பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ஸ்ரீவாரி சந்திரசேகர், இந்த கூட்டுப் பயிலரங்கம், கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைத்து பூஜ்ஜிய இலக்குகளை அடைவது குறித்தும், குறைந்த விலையில் சுற்றுச்சூழல் தொடர்பான சென்சார் கருவிகளை இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பின் மூலம் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள நீர் மாசு குறித்தும், நீரின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், குறைந்த செலவில் சென்சார் கருவிகளை உருவாக்கும் உத்திகள் தொடர்பாகவும் இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் அலெக்சாண்டர் எல்லீஸ், இந்தியாவும்- இங்கிலாந்தும் கடந்த ஆண்டு நீடித்த வளர்ச்சி மற்றும் பருவ நிலை மாற்ற இலக்குகளை   அடைவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், இது இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பில் அடிப்படைத் தூண்களாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார். குறைந்த செலவில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு சென்சார் கருவிகளை உருவாக்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த பயிலரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்தின் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுப்புகள் நிறுவனத்தின்  இயற்கை சூழல் ஆராய்ச்சி கவுன்சிலின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

திவாஹர்

Leave a Reply