எதிர்கால பெருந்தொற்றுக்கான தடுப்பூசி மேம்பாட்டின் வடிவமைப்பு மற்றும் விநியோக திட்டத்தை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க முதலீடை மேற்கொள்ளும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

எதிர்கால பெருந்தொற்றுக்கான தடுப்பூசி மேம்பாட்டின் வடிவமைப்பு மற்றும் விநியோக திட்டத்தை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க முதலீடை மேற்கொள்ளும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு)  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

“எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு தயாராதல்: பெருந்தொற்று தயார் நிலை புத்தாக்க கூட்டணியின் 100 நாட்கள் தடுப்பூசி சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாரா?” என்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச கூட்டத்தின்போது அவர் விடுத்திருந்த செய்தியில், கொவிட்-19 பற்றிய சந்தேகங்களுக்கு விடை காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையிலும் எதிர்கால சவால்களில் முதலீடு செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று  கூறினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் மாற்றத்திற்கான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் டிசம்பர் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் தில்லியில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய உரை நிகழ்த்திய இந்திய அரசின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜய் ராகவன், 100 நாள் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு சவாலாக உள்ள விஷயங்கள் குறித்தும், பொது சுகாதார தகவல் மற்றும் தரவு அமைப்புமுறைகள், தடுப்பூசி தளங்கள், மருத்துவ வசதிகள், விலங்குகள் மீதான சோதனைகள், ஒழுங்குமுறை நடைமுறை, செயலாக்கமுறை மற்றும் நிதி போன்றவற்றின் பங்களிப்பு பற்றியும் விரிவாகப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்த திட்டத்தை வகுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேம்பட்ட மற்றும் தடுப்பூசியின் வளர்ச்சிக்கு சமமான அணுகலையும் அணுகுமுறையையும் வழங்குவதற்கு ஒத்துழைப்பும், உலகளாவிய ஒன்றுபட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளும், நியாயமான பொது சுகாதார கொள்கையும் அவசியம், என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, மாற்றத்திற்கான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் பிரமோத் கார்க் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply