உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி: பயனாளிகள் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைவு ஏன்? விசாரணை தேவை!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

இந்தியாவில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 67% குறைந்திருப்பதாக வெளியாகி உள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. உழவர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.

சிறு மற்றும் குறு உழவர்கள் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களை வாங்குவதற்காக ஆண்டுக்கு 3 முறை தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 வழங்கும் திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 11.84 கோடி ஆகும். அதன்பின் 45 மாதங்கள் ஆகி விட்ட நிலையில், இதுவரை 12 தவணைகளாக நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் தவணை நிதி வழங்கப்படும் போது 11.84 கோடியாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை கடந்த மே – ஜுன் மாதங்களில் 11-ஆவது தவணை நிதி வழங்கப்பட்ட போது பயனாளிகளின் எண்ணிக்கை 3.87 கோடியாக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி இந்த விவரங்களை மத்திய வேளாண்துறை வெளியிட்டிருக்கிறது.

உழவர்களுக்கு மூலதன மானியம் வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை மாநில அரசுகள் தான் அடையாளம் காண வேண்டும்; இத்திட்டத்திற்கான பயனாளிகள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். கடந்த 2019-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, தகுதியுள்ள அனைவருக்கும் மானியம் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் சேருவதற்கு வாய்ப்பிருந்தது. அதன்படி பார்த்தால் ஒவ்வொரு முறையும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், ஆறாவது தவணைக்கு பிறகு பயனாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. குறிப்பாக பத்தாவது தவணையின் பயனாளிகள் எண்ணிக்கை 6.34 கோடி என்பது 11-ஆவது தவணையில் 3.87 கோடியாக, அதாவது கிட்டத்தட்ட பாதிக்கு பாதியாக குறைந்திருக்கிறது.

பயனாளிகளின் எண்ணிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக குறிப்பாக மத்திய பிரதேசத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 88.63 லட்சத்திலிருந்து வெறும் 12 ஆயிரமாக, அதாவது 99.90% குறைந்து விட்டது. சத்தீஸ்கரில் 94.7%, பிகாரில் 91.80% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இது 46.80 லட்சத்திலிருந்து 23.04 லட்சமாக குறைந்து விட்டது.

தமிழ்நாட்டில் மொத்த உழவர்களின் எண்ணிக்கை 79.38 லட்சமாகும். அவர்களில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு, குறு உழவர்களின் அளவு 93%, அதாவது 73.82 லட்சமாகும். இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது தகுதியுள்ள பயனாளிகளில் 58.63 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் மானியம் கிடைத்தது. இது 100% என்ற இலக்கை அடைந்தால் தான் அது இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இருந்திருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தின் தகுதியுள்ள பயனாளிகள் அளவு இப்போது வெறும் 28% ஆக குறைந்து விட்டது. இது உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

உழவர்களுக்கான மூலதன மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதை ஒப்புக்கொண்டிருக்கும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் அதற்கான காரணம் என்ன? என்பதை தெரிவிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய சமூகம் என்றால் அது உழவர்கள் தான். அவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நடப்பாண்டில் இந்த வீழ்ச்சி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கை எப்போது குறையத் தொடங்கியதோ, அப்போதே அதற்கான காரணங்கள் என்ன? என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அதை சரி செய்திருக்க வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக வீழ்ச்சி தொடரும் நிலையில் அதற்கான காரணங்களை கண்டறிய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசுகளும் தங்களின் பங்கிற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது சோகம்.

உழவர்களின் வாழ்வாதாரம் ஈடு இணையற்ற அளவில் அதிகரித்து அதன் காரணமாக அவர்கள் மானியம் வாங்குவதை நிறுத்திக் கொண்டிருந்தால் அது மகிழ்ச்சி தான். ஆனால், உழவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு நலன் பயக்கும் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைவதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. எனவே, மூலதன மானியத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் பற்றி மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் தெரியவரும் காரணங்களை சரி செய்து தகுதியுள்ள அனைத்து உழவர்களுக்கும் மூலதன மானியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எஸ்.திவ்யா

Leave a Reply