ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற பிரதமரின் கனவு நனவாகிறது!- ஹர்தீப் எஸ். பூரி.

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற பிரதமரின் கனவு நனவாகிறது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி தெரிவித்துள்ளார்.  ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறினார். 

ஜம்மு காஷ்மீரில் பிரதமரின் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் மக்களுக்கும், நாட்டுக்கும் இடையே உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.  மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு பயனளிப்பதாக கூறிய அவர், அடிமட்டத்திலிருந்து  இப்பணிகள் நடைபெற்று வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக மக்கள் முதலீடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.  அரசியல் பிரிவுகள் சட்டத்தின்  370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

11,721 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 25 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 13,600 கோடி ரூபாய்  மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  7 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் மிகப்பெரிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு-தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், 12 லட்சம்  இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 50,000 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறினார்.  2021 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலை 43 சதவீதம்  முதல்   46 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக திரு ஹர்தீப் எஸ். பூரி குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply