உலகில் நிலவும் மந்த நிலையிலும் இந்தியா ஒரு பிரகாசமான இடத்தில் உள்ளது! – மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அஹிம்சா விஸ்வ பாரதி தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த மாநாடு  மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஸ்வகுருவாக ஆவதற்கான இந்தியாவின் பணியை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் திரு பகத் சிங் கோஷ்யாரி, ஆச்சார்யா டாக்டர்.லோகேஷ் முனி மற்றும் அஹிம்சா விஸ்வபாரதியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், துறவிகளும் முனிவர்களும் நமது கடமையை நினைவு படுத்தி, நமது மனதில் ஒரு பொறியை ஏற்றுகின்றனர் என்று தெரிவித்தார்.  சடங்குகளின் பிடியில்  சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையுடன் மதத்தை இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  ஆச்சார்யா இந்த இலட்சியத்தில் சிறந்து விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விஸ்வகுருவாக மாறுவதற்கான நாட்டின் நோக்கம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், வீடு தோறும் மூவண்ணக்கொடி போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றியை மேற்கோள் காட்டினார், தேசியக் கொடி ஏற்றப்படாத ஒரு வீட்டைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மற்றபடி இருள் சூழ்ந்த உலகில் இந்தியா ஒரு பிரகாசமான புள்ளியாக விளங்குகிறது என்று கூறிய அவர், நாடு அடைந்து வரும் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு இந்தியனும் சாட்சியாக இருப்பதாகக் கூறினார்.

நமது குடும்ப விழுமியங்கள், பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி, காலனித்துவ மனப்பான்மையைக் கைவிட்டு, மீண்டும் நமது வேர்களுக்குச் செல்லுமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து உறுதிமொழிகள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். நமது அன்றாட வாழ்க்கையிலும் பிரதமரின் இந்த உறுதிமொழி நம்மை வழிநடத்திக்கொண்டே இருக்கும்  என்றார் அவர்.

ஒருவர் தன் சுயநலத்தில் அக்கறை கொள்வது போல் சமுதாயத்தைப் பேண வேண்டும் என்ற ஜெயின் மதத்தின் போதனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியா விஸ்வகுருவாக வேண்டும் என்று இந்தியக் குடிமக்கள் முடிவு செய்யும் போது அதைத் தடுக்கும் சக்தி உலகில் இல்லை என்று அமைச்சர் தமது உரையை நிறைவு செய்தார்.

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு , சஞ்சய் கோடாவத் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு அஹிம்சா சர்வதேச விருது 2022 இந்தச் சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது.

திவாஹர்

Leave a Reply