பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திரா திட்டம்: நீதிமன்றத்தை அணுகி அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புல்லூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார். இரு மாநில நல்லுறவை சிதைக்கும் வகையிலான ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அனிமிகனிபள்ளி என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஜெகன்ரெட்டி இவ்வாறு கூறினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள தமிழக எல்லை கிராமமான புல்லூரில் கனக நாச்சியம்மன் கோவிலுக்கு அருகில் பாலாற்றின் குறுக்கே 12 அடி உயரத்திற்கு ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதன் கொள்ளளவை 2 டி.எம்.சி அதிகரிக்கும் திட்டத்தை தான் ஆந்திர முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஜெகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு பின்னால் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளன. ஆனால், பன்மாநில ஆறான பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகளை கட்டுவதும், கட்டிய தடுப்பணைகளின் கொள்ளளவை அதிகரிக்க முயல்வதும் ஏற்க முடியாதவை.

புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க ஆந்திர அரசு முயல்வது இது முதல் முறையல்ல. குப்பம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான சந்திரபாபு நாயுடு, கடந்த முறை முதலமைச்சராக இருந்த போது, 2016-ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 10 அடியாக உயர்த்தும் பணிகளை மேற்கொண்டார். அதைக் கண்டித்து 30.06.2016-ஆம் நாள் நான் அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினார். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் புல்லூர் தடுப்பணையின் உயரம் திட்டமிடப்பட்டதை விட அதிகமாக 12 அடியாக உயர்த்தப்பட்டது.

உண்மையில் ஆந்திர அரசின் நோக்கம் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அணையின் உயரத்தை அதிகரிப்பதால் கிடைக்கும் கூடுதல் நீரை சேமிக்கும் வகையில் அங்குள்ள ஏரி, குளங்களை தூர் வாருவதும், புதிய ஏரி, குளங்களை அமைப்பதும் தான் ஆந்திர அரசின் திட்டம் ஆகும். இதன்மூலம் 2 டி.எம்.சி நீரை கூடுதலாக சேமித்து வைக்க முடியும். குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரத்தில் பல டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை கட்ட சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். பா.ம.க. மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது.

அதற்கு மாற்றாகத் தான் புல்லூர் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு முயல்கிறது. புல்லூர் தடுப்பணை பணிகளை ஆந்திர அரசு நிறைவு செய்து விட்டாலும் கூட, அதற்கு எதிராக 2016&ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்ததால், அடுத்தக்கட்டமாக ஏரி மற்றும் குளங்களை தூர்வாரும் பணிகளையும், புதிய நீர்நிலைகளை கட்டும் பணியையும் ஆந்திர அரசு அப்போது நிறுத்தி வைத்திருந்தது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்ட பணிகளைத் தான் இப்போது மீண்டும் தொடங்கப் போவதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

புல்லூர் தடுப்பணை தான் பாலாற்றின் குறுக்கே ஆந்திர எல்லையில் கட்டப்பட்ட கடைசி தடுப்பணை ஆகும். அந்த அணையின் உயரம் 12 அடியாக உயர்த்தப்பட்ட பிறகு தமிழகத்திற்கு தண்ணீர் வருவது குறைந்து விட்டது. கட்டுப்படுத்த முடியாத வெள்ளம் பெருக்கெடுத்த காலங்களில் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது. புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டால், வெள்ளம் ஏற்பட்டாலும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் வராது. அதனால் பாலாற்று பாசனப் பகுதிகள் பாலவனமாகி விடக்கூடும்.

ஆந்திராவின் வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகளை கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ள ஆந்திர அரசு, இப்போது பாலாற்று நீரையும் தடுக்க முயல்வது நியாயமல்ல. பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் இராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளை கட்டுவதோ, பாசனப் பரப்பை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதோ கூடாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க முயல்வது தவறு; இதை அனுமதிக்க முடியாது.

புல்லூர் தடுப்பணைக்கு எதிரான ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தமிழக அரசு அரசியல்ரீதியாக எதிர்க்காமல் விட்டது தான், அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆந்திர அரசு ஈடுபடுவதற்கு காரணம் ஆகும். ஆந்திர அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2016-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு கொண்டு வரச் செய்து, புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்கும் ஆந்திர அரசின் திட்டத்திற்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply