புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் பாதுகாப்பு கண்காட்சி 2022க்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத் துறை செயலாளர் ஆய்வு செய்தார்.

புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில், வரவிருக்கும் பாதுகாப்பு கண்காட்சி 2022 -க்கான ஏற்பாடுகளை  பாதுகாப்புத் துறைச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் விரிவாக ஆய்வு செய்தார். குஜராத் அரசின் தலைமைச் செயலாளர் திரு பங்கஜ் குமார் மற்றும் மாநில அரசு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு கண்காட்சியின்  12வது பதிப்பு குஜராத்தின் காந்திநகரில் அக்டோபர் 18 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  பாதுகாப்பில் தற்சார்பை  எட்டும் வகையில் பொதுமக்களை இதில் ஈடுபடுத்தவும், அவர்களை விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் சேர ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது; இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் குறித்து பல பங்குதாரர்களால் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கப்பட்டது. உள்நாட்டு பாதுகாப்பு தளங்கள் மற்றும் தயாரிப்புகளின் வணிகம் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் கண்காட்சியை மாபெரும் வெற்றியடையச் செய்ய அதிகாரிகளை டாக்டர் அஜய் குமார் வலியுறுத்தினார்.

கடந்த  மார்ச் 10-14 வரை நடத்த திட்டமிடப்பட்ட கண்காட்சி சில சவால்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதிகள் (அக்டோபர் 18-22, 2022) ஆகஸ்ட் 08 அன்று அறிவிக்கப்பட்டது. வரவிருக்கும் பதிப்பு இந்திய நிறுவனங்களுக்கு பிரத்யேகமான முதல் பதிப்பாகும். இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய துணை நிறுவனங்கள், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனப் பிரிவு, இந்திய நிறுவனத்துடன் கூட்டு முயற்சியைக் கொண்ட கண்காட்சியாளர் ஆகியோர் இந்திய பங்கேற்பாளர்களாகக் கருதப்படுவார்கள்.

பாதுகாப்பு கண்காட்சியின்  கருப்பொருள் ‘பெருமைக்கான பாதை’ என்பதாகும். இந்த நிகழ்விற்கு முன்னதாக, மாநிலங்களை அரங்குகள் அமைப்பதற்கும், அதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் நாடு தழுவிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரங்குகள் அமைக்க  பல மாநிலங்கள் உறுதி அளித்துள்ளன. தற்போது 8 ஆக உள்ள மாநில அரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் மாநில முதலமைச்சர்கள், தொழில்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் போன்றவர்களுக்கு முதலீட்டைக் கோருவதற்கும் அந்தந்த மாநிலங்களை மேம்படுத்துவதற்கும் இது வாய்ப்பளிக்கும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply