செப்டம்பர் 8 அன்று டோக்கியோவில் நடைபெறும் இந்தியா – ஜப்பான் 2+2 பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது மங்கோலிய பயணம் முடிந்ததும், மூன்றுநாள் அரசு முறைப் பயணமாக இன்று (செப்டம்பர் 7 2022) ஜப்பான் புறப்பட்டு செல்கிறார். 2022 செப்டம்பர் 8 அன்று, டோக்கியோவில் நடைபெறும் 2-வது இந்தியா – ஜப்பான் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கருடன், பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். ஜப்பான் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.யசுகாசு ஹமாடா, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.யோஷிமாசா ஹயாஷி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்து, மேலும் முன்னோக்கி செல்ல வழி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும், ஜப்பானும் சிறந்த, உலகளாவிய நட்புறவை கொண்டுள்ளன. இந்த ஆண்டுடன் இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2+2 பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் திரு.ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பயணத்தின்போது ஜப்பான் பிரதமர் .ஃபூமியோ கிஷிடாவையும் அவர் சந்திக்க உள்ளார்.

டோக்கியோவிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ராஜ்நாத் சிங், ஜப்பானில் வசிக்கும் புலம் பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடுவார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply