இலங்கையில் இருந்து அகதிகள் குழுவொன்று கடல் மார்க்கமாக இன்று (05.05.2014) தமிழகம் வந்தடைந்துள்ளது.
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கை அகதிகள் கடல் மார்க்கமாக தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு இன்று வந்தனர்.
அவர்களிடம் தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது இலங்கை இராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம். எங்களை போல் சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர்.
மேலும், இலங்கையில் விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி, தமிழர்களை இலங்கை இராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர் என்று பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் செல்வது சமீப காலமாக குறைந்திருந்தது. இந்த நிலையில் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சி.மகேந்திரன்.