கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஈடுசெய்ய மொத்தம் ரூ.25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் தேவை: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

pr221215atncm lr to pmtncm lr to pm2tncm lr to pm3

பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;–

தமிழகத்தில் இந்த மாத முதல் வாரத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பிரளயம் ஏற்பட்டது. சென்னையின் வரலாற்றில் டிசம்பர் 1–ந் தேதி வெள்ள தினமாக மாறிவிட்டது.

மிக அதிகமாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை வாசிகள் சிக்கிக்கொண்டதோடு, லட்சக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன. டிசம்பரின் முதல் 5 நாட்களில் பதிவான மழையளவை கணக்கிட்டால், சென்னை மாவட்டத்தில் 883 சதவீதமும், காஞ்சீபுரத்தில் ஆயிரத்து 254 சதவீதமும், திருவள்ளூரில் 863 சதவீதமும் மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு ஆகிய நீப்பிடிப்பு பகுதியில் பெய்த இந்த கனமழையால், மழைநீர் வடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதோடு, பிச்சாட்டூர், கிருஷ்ணாபுரம் உள்பட ஆந்திராவின் தென்பகுதியில் உள்ள அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், மேலும் வெள்ளத்தை உருவாக்கி, தென் தமிழகத்தில் உள்ள வடிகால்களை நிறைத்துவிட்டது.

சாலைகளிலும் வெள்ளம் ஓடியது. பல இடங்களில் ரெயில், சாலை போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. டிசம்பர் 1–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டது. மின்சாரம் தாக்கி யாரும் இறந்துவிடக்கூடாது என்பதற்காக, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொலைபேசி இணைப்புகள், வங்கி, ஏ.டி.எம். சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. நிலையான சொத்துகள், மோட்டார் வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்தன. எனவே போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அரசு முடுக்கியது.

எனது அறிவுரையின் பேரில், மாநில அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் நிவாரண பணிகளை கண்காணித்தனர். மாநில பேரிடர் மீட்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றின் தலா 6 படைகள், 1,400 தீயணைப்பு வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் உள்பட 30 ஆயிரம் போலீசார் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதாவது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மொத்தம் 80 ஆயிரம் அரசு பணியாளர்கள் 24 மணி நேரமும் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டனர். நீர்சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக ஆயுதப்படைகள், தேசிய பேரிடர் மீட்பு படைகளின் உதவியை தமிழக அரசு கோரியது.

ஆயிரத்து 200 ராணுவத்தினர், கடற்படை வீரர்கள், கடலோர காவல்படை மற்றும் விமான படையினர் 600 பேர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆயிரத்து 920 பேர் இந்த பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த வெள்ளத்தால் சொத்துகளுக்கும், உள்கட்டமைப்புகளுக்கும் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் 3 நிலைகளாக ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ரூ.8 ஆயிரத்து 481 கோடி நிதியுதவி கேட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் மத்திய குழு ஒன்று தமிழகத்துக்கு வந்து நவம்பர் 26 முதல் 28–ந் தேதி வரை பார்வையிட்டது.

வெள்ள சேதம் பற்றிய மதிப்பீட்டை அந்த குழு தயாரித்தது. இந்த குழு வந்து சென்ற பிறகுதான் 4–வது முறையாக மிகக் கடுமையான மழை பெய்து தீர்த்தது.

கடந்த நவம்பர் 23–ந் தேதி தமிழக அரசுக்கு ரூ.940 கோடியே 42 லட்சத்தை மத்திய அரசு அனுமதித்தது. இதில், 2014–15–ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு பங்கின் கடைசி தவணை தொகையான ரூ.133 கோடியே 79½ லட்சம்; 2015–16–ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு பங்கின் இரண்டாவது தவணை தொகையான ரூ.254 கோடியே 62½ லட்சம்; நிதி ஆயோக் தொடர்பான சிறப்பு உதவித் தொகையான ரூ.552 கோடி அடங்கும்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு நிதி அனுமதிப்பது கூடுதல் நிதியாக இல்லை. ஏற்கனவே 2014–15, 2015–16–ம் ஆண்டுகளில் நிவாரணத்துக்காக மாநில அரசு செய்த செலவுகளை திருப்பித் தரும் வகையில் தரப்படும் தொகையாகவே உள்ளது. சிறப்பு திட்டங்களுக்காக சிறப்பு உதவி தொகையாக அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.552 கோடியை தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த முடியாது.

முதலில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் சேர்க்கப்படாத வெள்ள சேத விவரங்களை இணைப்பு மனுவில் சேர்ப்பதாகவும், அந்த மனுவை அரசு தயார் செய்து வருகிறது என்றும் டிசம்பர் 3–ந் தேதி சென்னைக்கு நீங்கள் வந்தபோது கூறியிருந்தேன்.

மறுசீரமைப்பு பணி மற்றும் நிவாரணத்துக்காக உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஐந்தாயிரம் கோடி ரூபாயை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். அதை ஏற்று, நீங்கள் உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தீர்கள்.

தமிழ்நாட்டில் 2015–ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் நான்காவது முறையாக நிகழ்ந்த கடுமையான மழைப்பொழிவு ஏற்படுத்திய வெள்ளத்தினால் விளைந்த சேதங்கள் குறித்து இணைப்பு மனுவை தயாரித்துள்ளோம்.

தற்காலிக மற்றும் நிரந்தர மீட்பு பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதியாக ரூ.17 ஆயிரத்து 431 கோடியே 51 லட்சம் தேவைப்படுகிறது. கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஈடுசெய்ய 2015–ம் ஆண்டு நவம்பர் 23–ந் தேதி அனுப்பிய கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்த 8 ஆயிரத்து 481 கோடி ரூபாயையும் சேர்த்து மாநிலத்திற்கு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக மொத்தம் ரூ.25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் தேவைப்படுகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான நிவாரணத்தை வழங்கி மக்களின் துயர்தணிக்க உட்கட்டமைப்பை மீண்டும் சீரமைக்க மாநில அரசு பொறுப்பேற்றுள்ளது. இப்பணிகளுக்காக செலவினங்கள் மிகுந்த அளவில் இருப்பதால், தமிழக அரசுக்கு இச்செலவினங்களை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது.

குறிப்பாக, 14–வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் விளைவாக மத்திய அரசுக்கு, மாநில அரசால் செலுத்தப்படவேண்டிய வரி தொகுப்பின் அளவு கூடியதால் மிகப்பெரும் நிதி இழப்புக்கு மாநில அரசு உள்ளாகியுள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்பட்ட கடும் மழை, வாழ்வாதார இழப்பு, உயிர் இழப்பு மற்றும் கால்நடை இழப்பை ஏற்படுத்தியதோடு நிலைப்பயிர், உடைமைகள் இவற்றிற்கும் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு, ‘‘கடுமையான இயற்கை பேரிடர்’’ என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இரு கோரிக்கை மனுக்களிலும் தமிழ்நாட்டின் தேவையாக குறிப்பிடப்பட்டுள்ள 25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் ரூபாயை வெள்ளம் ஏற்படுத்திய சேதங்களை ஈடுசெய்வதற்கான நிவாரண பணிகளை மேற்கொள்ள, உள்துறை அமைச்சகத்திற்கும் மற்றும் இது தொடர்பான பிற அமைச்சகங்களுக்கும் எங்கள் கோரிக்கை மனுக்களை விரைந்து பரிசீலனை செய்ய அறிவுறுத்த வேண்டும்.

புனரமைப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் பொருட்டு மேலும் உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்குமாறு 20.12.15 அன்று சென்னைக்கு வருகை தந்த மத்திய நிதி, கம்பெனி விவகாரங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரியிடம் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடி நிதியாக இத்தொகையினை வழங்கிட நிதி அமைச்சகத்தை அறிவுறுத்தவேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com