யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் பார்வையிட்டார்.

யோக்யகர்த்தாவில் உள்ள தனித்துவமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இந்தோனேஷியா அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் சென்றிருந்தார். கோவில் வளாகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், நினைவுப் பலகையை இருதலைவர்களும் திறந்து வைத்தனர்.

9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பனன் கோவில் வளாகம் பகவான் பிரம்மா. பகவான் விஷ்ணு, பகவான் சிவா ஆகிய மும்மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தோனேஷியாவில் உள்ள மிகப் பெரிய கோவில் வளாகமாகும். இக்கோவில் வளாகம் இந்தியா – இந்தோனேஷியா இடையே பகிரப்பட்ட நாகரிக, கலாச்சார பாரம்பரியத்தின் நீடித்த அடையாளமாக உள்ளது.

பிரம்பனன் வளாகத்தில் கோவில்களை சீரமைப்பதற்கு இந்தியாவின் உதவியை பெறுவது தொடர்பாக 2025-ம் ஆண்டு அதிபர் திரு பிரபோவோவின் இந்திய அரசுமுறைப் பயணத்தின் போது இருதலைவர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிதலின் அடிப்படையில் இந்தப் பாதுகாப்பு, சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தென்கிழக்காசியாவில் உள்ள பல்வேறு உலகப் பாரம்பரிய தளங்களைச் சீரமைப்பதிலும், பாதுகாப்பதிலும் இந்தியா வெற்றிகரமான செயல்பாட்டு சாதனையைக் கொண்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை முன்னதாக இந்தோனேஷியாவில் உள்ள போரோபோதூர் கோவில் வளாகத்தின் விரிவான ஆவணப்படுத்துதல் பணிகளையும் மேற்கொண்டிருந்தது. பிரம்பனன் கோவில் வளாகத்தில் சீரமைப்பு, பாதுகாப்புக்கான இந்தியாவின் ஆதரவு, பகிரப்பட்ட நாகரிகத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவின் நீடித்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply