எதிர்காலத்திற்குத் தேவையான, ஒருங்கிணைந்த போக்குவரத்துச் சூழல் கொண்ட கட்டமைப்பை உருவாக்குவதில், மாற்றங்களை ஏற்படுத்தும் முன் முயற்சிகளின் உத்திசார் முக்கியத்துவம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் இன்று தேசிய நெடுஞ்சாலைகள் சரக்குப் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தின் ஆய்வுக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்முனை தளவாடப் பூங்கா, கம்பிவடப் பாதைகள், பல்முனை நிலையங்கள், வழித்தட வசதிகள் ஆகியவற்றின் திட்ட அளவிலான முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
இத்தகையத் திட்டங்கள் பல்முனை போக்குவரத்துக்கான இணைப்பை வலுப்படுத்துவதுடன், புதிய பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் கூறினார், சீரான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், இந்தியாவின் ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்துக்கானப் போட்டித் திறனை மேம்படுத்த உதவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
திட்டத்தின் செயலாக்கத்தைப் பாதிக்கும் முக்கிய சவால்கள் குறித்தும் மதிப்பீடு செய்த திரு கட்கரி, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தடைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதுடன், திட்டத்தின் செயலாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உள்கட்டமைப்பு வசதிகளுக்கானத் திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவு செய்து, போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி, அதற்கான செலவுகளைக் குறைத்து, பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியா, தற்சார்பு இந்தியா போன்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் முன்னெடுத்துச் செல்ல உதவிடும் என்று திரு கட்கரி கூறினார்.
எம்.பிரபாகரன்
