சௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) கீழ் இயங்கும் ‘டிப்கா திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம்’, நாட்டின் நிலக்கரித் துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றத்திற்கு முக்கியச் சான்றாகத் திகழ்கிறது. 1992-ஆம் ஆண்டில் வெறும் 1 மில்லியன் டன்னாக இருந்த இதன் நிலக்கரி உற்பத்தி, 2025-26 நிதியாண்டில் 37.5 மில்லியன் டன் உற்பத்தி மற்றும் 39.43 மில்லியன் டன் விநியோகம் என முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டி சாதனை படைத்துள்ளது.
சுற்றுச்சூழல் இசைவாணை ஆண்டுக்கு 40 மில்லியன் டன் (40 MTPA) ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக 60 மில்லியன் டன் உற்பத்தியை எட்டுவதற்கான தொலைநோக்குத் திட்டத்துடன் இச்சுரங்கம் நாட்டின் முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டிலும் ஜூலை 25 வரை 12.66 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு, முந்தைய ஆண்டின் இதே கால அளவை விட 30.5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், 13.87 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு, அனல் மின் நிலையங்களுக்குத் தடையில்லா எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டில் ரூ.3,230.91 கோடி ஒட்டுமொத்த லாபம் ஈட்டியுள்ள இச்சுரங்கம், நவீன தொழில்நுட்ப உத்திகள், திறம்பட நிலக்கரியை எடுத்துச் செல்லும் உள்கட்டமைப்புகள் மற்றும் தூசு கட்டுப்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்கி வருகிறது. நிலையான உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு டிப்கா திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம் தொடர்ந்து பங்காற்றி வருகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
