பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (04.07.2026) ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சுமார் 10:45 மணிக்கு ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் அவர், ஜோத்பூரில் மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மதியம் சுமார் 12:15 மணிக்கு பலோத்ரா செல்லும் பிரதமர், அங்கு சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் பின்னர் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மாலை 4:30 மணியளவில் அகமதாபாத் சாணந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
பிராந்திய அளவிலான விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜோத்பூரில் 28,840 கோடி ரூபாய் மதிப்பில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் நாட்டின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் 100 விமான ஓடுதளங்களை மேம்படுத்துவதையும், தொலைதூரப் பகுதிகளின் போக்குவரத்து வசதிக்காக 200 நவீன ஹெலிபேடுகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஜோத்பூர் விமான நிலையத்தில் 480 கோடி ரூபாய் செலவில் ராஜஸ்தானின் பாரம்பரியக் கலை நயத்துடன் 23,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்தையும் அவர் திறந்து வைக்கிறார். இது ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
பலோத்ராவில் பெட்ரோகெமிக்கல், நகர்ப்புறப் போக்குவரத்து, ரயில்வே, சாலைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக, பச்பத்ராவில் 79,450 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், ராஜஸ்தான் அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த பெட்ரோலியம் சுத்திகரிப்பு-பெட்ரோகெமிக்கல் பசுமை வளாகத்தைப் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தும். இதனைத் தொடர்ந்து 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 900 கோடி ரூபாய் மதிப்பிலான சுரு-சதுல்பூர், சுரு-ரத்தன்கர் இடையே இரட்டை ரயில் வழித்தட திட்டங்களையும், 740 கோடி ரூபாய் மதிப்பிலான ஜோத்பூர் வெளிவட்டச் சாலைத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். மேலும், பிகனீரில் அமைக்கப்பட்டுள்ள 1,000 மெகாவாட், 300 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். ராஜஸ்தான் அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 54,000 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் பிரதமர் வழங்குகிறார்.
குஜராத் மாநிலம் சாணந்த் பகுதியில் 7,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முதல் நான்கு திட்டங்களில் ஒன்றான இந்த ஆலை, முழுத் திறனுடன் செயல்படும்போது ஆண்டுக்கு 500 கோடி செமிகண்டக்டர் சிப்புகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகக் கட்டமைப்பில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதுடன், தொழில்நுட்பத் துறையில் நாட்டின் தற்சார்பு இலக்கை அடைவதில் முக்கிய மைல்கல்லாகத் திகழும்.
எஸ்.சதிஸ் சர்மா
