மாணவர்கள் புதிய கருத்துக்களைத் துணிச்சலுடன் கண்டறிய வேண்டும் !– குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

ஆந்திரப்பிரதேச மாநிலம் அனந்தபுரமுவில் உள்ள ஆந்திரப்பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆந்திரப்பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா என்பது கொண்டாட்ட நாளாக மட்டுமின்றி புதிய கல்வி நிறுவனப் பயணத்தில் முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டார். எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில், இப்பல்கலைக்கழகம் நீண்ட கால தொலைநோக்குப் பார்வையை உருவாக்கியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறிப்பாக தரமான கல்வி தொடர்புடைய இலக்குகளை அடைவதில் இப்பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு அனைவரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சியையொட்டிய பொறுப்பை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

ஆந்திரப்பிரதேச மத்திய பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையமாக உருவெடுக்கும் என்றும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களின் பல ஆண்டு அர்ப்பணிப்பு, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் இறுதி வடிவமாகும் என்று கூறினார். பல்கலைக்கழகத்திற்குள் கனவுகளுடன் நுழைந்த அவர்கள், இன்று அறிவு, தன்னம்பிக்கை, வாய்ப்புகளுக்கான புதிய வழிகளை ஏற்படுத்தும் பட்டத்துடன் வெளியேறுவதாகக் கூறினார். மாணவர்களின் கடின உழைப்பே அவர்களுடைய வெற்றிக்குக் காரணம் என்றாலும் பெற்றோரின் தியாகங்கள், ஆசிரியரின் வழிகாட்டுதல்கள், சமூகத்தின் ஆதரவு ஆகியவை வெற்றியை வடிவமைத்துள்ளதாக குடியரசுத்தலைவர் கூறினார். அதனால் அதனை சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்தும் கடமை அவர்களுக்கு உள்ளதாகக் குறிப்பிட்டார். வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்முனைவோர்களாகவோ, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான விஞ்ஞானிகளாகவோ, மக்களுக்கு சேவையாற்றும் அரசுப் பணியாளர்களாகவோ அல்லது சமூகத்திற்கு சேவையாற்றும் நற்பணியாளர்களாகவோ திகழ்ந்தாலும் அவர்களுடைய கல்வி அறிவு விளிம்புநிலை மக்களுக்கான வலிமையின் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply