வேளாண் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் – திரிபுரா மாநில அரசும் இணைந்து சர்வதேச இயற்கை வேளாண் பொருட்களுக்கான வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தன.

மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா, திரிபுரா மாநில இயற்கை வேளாண்மை மேம்பாட்டு முகமை, திரிபுரா அரசின் வேளாண் நலத்துறை ஆகியவை இணைந்து, திரிபுராவின் அகர்தலாவில் ஒரு சர்வதேச இயற்கை வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தன.

மாநிலத்தின் இயற்கை உற்பத்தியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், சர்வதேச வாங்குவோர் ஆகியோருக்குப் புதிய வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்கும் நீண்டகால சந்தை இணைப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஒரு நேரடித் தளத்தை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 27 ஏற்றுமதியாளர்கள், 22 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்/உழவர் உற்பத்தியாளர் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 96 விவசாயிகள், பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் உட்பட சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், அர்ஜென்டினா போன்ற நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சர்வதேச வாங்குவோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்தப் பன்முகப் பங்கேற்பு, விவசாயிகள், உற்பத்தியாளர் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், அரசுத் தரப்பினர், சர்வதேச வாங்குவோர் ஆகியோருக்கு இடையே நேரடி கலந்துரையாடலுக்கான ஒரு தளத்தை வழங்கியதுடன், மூலப்பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள், சந்தைத் தேவைகள், சாத்தியமான வணிகத் தொடர்புகள் குறித்த ஆலோசனைகளுக்கும் வழிவகுத்தது.

இந்த நிகழ்வில், திரிபுராவின் இயற்கைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 12 அரங்குகள் இடம்பெற்றன.

Leave a Reply