விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கவும் தடுக்கவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரோ எடுத்து வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

அதிக எண்ணிக்கையிலான தாழ் புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் பெருகி, விண்வெளிக் குப்பைகள் குவிவதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கவனித்துள்ளதுடன், அதனைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (13.08.2026) மாநிலங்களவையில் அளித்த பதிலில் தெரிவித்தார்.

செயல்திறன் மிக்க விண்வெளி குப்பை அகற்றுதல் வழிமுறைகள் மூலம், விண்வெளிச் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும், மேலும் குப்பைகள் உருவாவதைக் கட்டுப்படுத்துவதிலும் இஸ்ரோவின் ‘குப்பைகளற்ற விண்வெளித் திட்டம்’ முக்கியப் பங்கு வகிக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இணைய இணைப்புக்கான செயற்கைக்கோள் கூட்டங்கள் பொதுவாக சில ஆயிரம் செயற்கைக்கோள்களைக் கொண்டிருப்பதால், அவற்றின் சுற்றுப்பாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோதல் அபாயங்கள் கணிசமாக அதிகரிக்கின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். பல பெரிய கூட்டங்கள் தன்னிச்சையாக மோதலைத் தவிர்க்கும் திறன்களைக் கொண்டிருந்தாலும், சில செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையிலேயே செயலிழக்கக்கூடும் என்றும் மோதல்களைத் தவிர்ப்பதற்கான திறனும் அவற்றுக்கு இல்லாமல் போகலாம் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச ஒத்துழைப்பு, உள்நாட்டுத் திறன்கள் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், நீண்டகால நிலைத்தன்மைக்கு சர்வதேச ஒத்துழைப்பும் தரவுப் பகிர்வும் அவசியம் என்று கூறினார்.

Leave a Reply