முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த “இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பில் எழுதியுள்ள சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பங்கேற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் குடியரசுத்தலைவருடனான தனது நட்பு குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், பல ஆண்டுகளாக திரு கோவிந்த் அளித்த வழிகாட்டுதல்கள், அன்பு ஆகியவை மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகத் தெரிவித்தார். திரு கோவிந்த் உடனான நீண்டகால அறிமுகம், அவரை நெருக்கமாக அறிந்துக் கொள்ளும் நல்ல வாய்ப்பு, குடியரசுத்தலைவராக அவர் அளித்த வழிகாட்டுதல், அனைத்துக்கும் மேலாக தன் மீது அவர் காட்டிய சிறப்பான அன்பு, பணிவு ஆகியவை தமது பெரும் சொத்துகள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னாள் குடியரசுத்தலைவரின் இயல்பு, திறன்கள் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்து பாராட்டிய பிரதமர், அவருடைய இலக்கியப் பணி நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கு நீடித்த சான்றுகளாக திகழும் என்று தெரிவித்தார். திரு ராம் நாத் கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்திற்கும், இந்தியச் சமூகத்திற்கும் விலை மதிப்பற்ற சொத்தாக அமையும் என்று தான் முழு நம்பிக்கையுடன் கூற முடியும் என்று திரு மோடி உறுதியளித்தார். ஒரு புத்தக விழாவில், அது குறித்த முன்னோட்டம் பற்றி மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அனைவரும் அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து பயன்பெறுவதே சிறந்தது என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
இளைய தலைமுறையினருக்கு இந்த நினைவுக்குறிப்புகள் அளிக்கும் கல்வி சார்ந்த மதிப்பைச் சுட்டிக் காட்டிய பிரதமர், எதிர்கால சந்ததியினர் முன்னாள் குடியரசுத்தலைவரின் வார்த்தைகளில் இருந்து உத்வேகம் பெற வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். நாட்டின் புதிய தலைமுறையினரும் அவரது எழுத்துகளையும், அனுபவங்களையும் படிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அனைவரும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றும் திரு மோடி கூறினார். “இந்தியக் குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பைக் குறித்து பேசிய பிரதமர், தனிப்பட்ட கடினமானத் தருணங்கள், நாட்டின் ஜனநாயக வெற்றி ஆகியவற்றின் மீதான முக்கியத்துவத்தை விளக்கினார். வாழ்க்கைப் போராட்டங்கள் அவருடைய தனிப்பட்டவை என்றும், ஆனால் அந்தப் போராட்டங்களால் கிடைத்த வெற்றி இந்தியக் குடியரசுக்கும், ஜனநாயகத்திற்கும் உரியது என்று திரு மோடி குறிப்பிட்டார்.
திவாஹர்
