2023-ம் ஆண்டு தொகுப்பு ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் சிந்தனையைத் தூண்டும், ஊக்கமளிக்கும் உரையாடலில், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் ஈடுபட்டார். அந்த தொகுப்பில் 74 பெண் அதிகாரிகளுடன் இந்திய நிர்வாக சேவைகளின் வரலாற்றில் மிகப்பெரிய பெண் பிரதிநிதித்துவம் உள்ளதை அவர் பாராட்டினார். இது இந்த தொகுப்பில் உள்ள மொத்தம் 180 அதிகாரிகளில் 41 சதவீதமாகும்.
46 மத்திய அமைச்சகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள உதவிச் செயலாளர்கள் திட்டத்தின் கீழ் 2025 ஏப்ரல் 01 முதல் மே 30 வரை 8 வார காலத்திற்கு ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சிக்குக் காரணம் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் தலைமையிலான முன்முயற்சிகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தை அடைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். பிரதமர் எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முன்னணியில் இருந்து வருகிறார் என்றும் இந்த சாதனை அளவிலான பிரதிநிதித்துவத்துக்கும் அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான நிர்வாகத்திற்கும் பிரதமர் வழங்கும் அசைக்க முடியாத ஆதரவுக்கு ஒரு சான்றாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
2015-ம் ஆண்டில் உதவிச் செயலாளர்கள் திட்டம் தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்த அமைச்சர், இளம் அதிகாரிகளுக்கு அவர்களின் பணிக்காலத்தின் தொடக்கத்திலேயே உடனடியாக மேம்பட்ட பணி அனுபவத்தை வழங்குவது பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனை என்று அவர் கூறினார். இந்த திட்டம் அதிகாரிகளிடையே நம்பிக்கையின் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது எனவும் தொற்றுநோய்களின் போது, மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மைக்கு அழைக்கப்பட்டபோது இந்த அதிகாரிகளில் பலர் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டனர் என்றும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்த முயற்சி 10-வது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் , திறமையான, நம்பிக்கையான குடிமைப் பணியாளர்களை வளர்ப்பதில் இத்திட்டத்தின் சிறந்த தாக்கத்தை திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். குடிமைப் பணிகள் ஜனநாயகமயமாக்கப்பட்டதற்கும், பஞ்சாப், ஹரியானா, வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் இருந்து பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதற்கும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதில் 99 அதிகாரிகள் பொறியியல் பின்னணியைச் சேர்ந்தவர்கள் எனவும் பலர் மருத்துவம், பிற தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இந்த தொகுப்பின் கல்வி, தொழில்முறை பன்முகத்தன்மை குறித்து பெருமிதம் தெரிவித்தார். பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏன் குடிமைப் பணிகளுக்கு வருகிறார்கள் என்று தாம் ஆச்சரியப்பட்டதாகவும், ஆனால் இப்போது, டிஜிட்டல் இந்தியா முதல் நவீன நகரங்கள் வரை அரசின் முதன்மை திட்டங்களின் தொழில்நுட்ப இயல்பு அவர்களின் பங்கை தேசிய சொத்தாக ஆக்குகிறது என்பதை தாம் உணர்வதாகவும் அமைச்சர் கூறினார்.
எம்.பிரபாகரன்
