தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் எழுதிய அத்தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நடந்ததாக எழுந்துள்ள புகார்கள் தான் இதற்கு காரணம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை &அறிவியல் கல்லூரிகளில் 48 துறைகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த திசம்பர் 27&ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு 42,064 பேர் எழுதிய இந்தத் தேர்வுகளில் 5 பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் பிப்ரவரி மாதம் வெளியிடப் பட்டது. மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகளில் தான் பெரும் குளறுபடிகள் நடந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்வுகளில் கூட குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கண்ர்டிக்கத்தக்கதாகும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு மொத்தம் இரு தாள்களையும், 3 பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும். முதல் தாளில் ஏ, பி என இரு பகுதிகள் உள்ளன. அவற்றில் முதல் பகுதி தேர்வர்களின் தமிழ்மொழிப் புலமையை அறிவதற்கானது. 50 மதிப்பெண்களுக்கான அப்பகுதியில் 40%, அதாவது 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் போதுமானது. இதில் பெறப்படும் மதிப்பெண்கள் தரவரிசையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படாது. முதல் தாளின் பி பிரிவில் தேர்வர்களின் விருப்பப்பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப் படும்; அவற்றுக்கு தலா 1.5 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டாவது தாளில் 5 தலைப்புகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்வு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு 50 மதிப்பெண்கள்.
இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 40% மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 35% மதிப்பெண்களும் பெற வேண்டும். தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில் முதல் தாளின் பி பிரிவில் 111 மதிப்பெண்கள், அதாவது 74% மதிப்பெண்கள் பெற்ற பலருக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.
இரண்டாம் தாளில் கேட்கப்படும் 5 வினாக்களில் ஒன்றுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுத வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாடு பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்படும். மொத்தம் எழுப்பப்படும் 5 வினாக்களில் தங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த ஒரு தலைப்பில் தான் தேர்வர்கள் கட்டுரை எழுதுவார்கள். அப்படி எழுதப்படும் கட்டுரைக்கு, அதுவும் விருப்பப்பாடத்தில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவரால் எழுதப்படும் கட்டுரைக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை. தலைப்புக்கு பொருத்தமான ஓரிரு தகவல்களை எழுதினால் கூட குறைந்தது 5 அல்லது 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். முனைவர் பட்டம் வென்ற ஒருவர், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு எதுவுமே தெரியாதவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
அதேபோல், முதல் தாளில் 54, அதாவது 36% மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 49, அதாவது 98% மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தத் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% அல்லது 35% என்பது மொத்த மதிப்பெண்களைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. தாள்வாரியாக தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடப்பட்டால், விருப்பப்பாடத்தில் 54 மதிப்பெண் எடுத்த பொதுப்பிரிவு மாணவர் ஒருவர் அந்தத் தாளில் தேர்ச்சி பெறவே முடியாது. அப்படிப்பட்டவர் கட்டுரைத் தாளில் 98% மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பதை எவராலுமே நம்பமுடியாது.
முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இரண்டாம் தாளில் 98% மதிப்பெண் வழங்கப்பட்டதும் இயல்பானதாக தெரியவில்லை. முதல் தாளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை போட்டியிலிருந்து நீக்க வேண்டும்; முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் இவ்வாறு செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் 12 ஆண்டுகளுக்கு முன் இப்போது தான் முதன்முறையாக நியமிக்கப்படுகின்றனர். இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும்; தகுதியுடையவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வுகளை எழுதினர். அவர்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் எந்த முறைகேட்டுக்கும் இடமளிக்கக் கூடாது.
எனவே, உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளின் இரண்டாம் தாளுக்கான விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி நடந்ததா? அல்லது முறைகேடு நடந்ததா? என்பது குறித்து விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை ஆள்தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் அன்புமணி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
