குஜராத் மாநிலம் வட்டலில் நடைபெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திரின் 200-வது ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

குஜராத் மாநிலம் வட்டலில் இன்று நடைபெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திரின் 200-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். காணொலி காட்சி மூலம் உரையாற்றிய அவர், ஸ்ரீ சுவாமிநாராயணனின் அருளால்தான் 200-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார். உலகெங்கிலுமிருந்து வந்துள்ள அனைத்து சீடர்களையும் வரவேற்ற திரு மோடி, சுவாமிநாராயண் மந்திரின் பாரம்பரியத்தில் சேவை முதன்மையானது என்று குறிப்பிட்டார். ஊடகங்களில் இந்த கொண்டாட்டங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக பிரதமர் கூறினார்.

வட்டல் தாமில் 200-வது ஆண்டு கொண்டாட்டங்கள், வெறும் வரலாறாக மட்டும் நடைபெறவில்லை  என்று குறிப்பிட்ட திரு மோடி, வட்டல் தாமில் மிகுந்த நம்பிக்கையுடன் வளர்ந்த தாம் உட்பட பல சீடர்களுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். இந்திய கலாச்சாரத்தின் நிரந்தர ஓட்டத்திற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். ஸ்ரீ சுவாமிநாராயண், வட்டல் தாமை நிறுவி 200 ஆண்டுகளுக்குப் பிறகும், ஆன்மீக உணர்வு உயிர்ப்புடன் உள்ளது என்றும், ஸ்ரீ சுவாமிநாராயணனின் போதனைகள் மற்றும் ஆற்றலை இன்றுவரை கூட அனுபவிக்க முடியும் என்றும் திரு மோடி சுட்டிக் காட்டினார். இந்த ஆலயத்தின் 200-வது ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, அனைத்து துறவிகள் மற்றும் சீடர்களுக்கு திரு மோடி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். மத்திய அரசு இருநூறு ரூபாய் (200) மதிப்புள்ள வெள்ளி நாணயத்தையும், நினைவிடத்தின் தபால் தலையையும் வெளியிட்டது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சின்னங்கள், இந்த மகத்தான தருணத்தின் நினைவுகளை வரும் தலைமுறையினரின் மனதில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

சுவாமி நாராயணனுடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் இந்த பாரம்பரியத்துடனான வலுவான, தனிப்பட்ட, ஆன்மீக மற்றும் சமூக உறவை உணர்ந்துள்ளனர் என்று பிரதமர் வலியுறுத்தினார். கடந்த காலத்திலும், இப்போதும் புனிதர்களின் தெய்வீக சகவாசத்தை அனுபவித்ததாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பிரதிபலிப்பு வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் கூறினார். வேறு வேலைகள் காரணமாக தம்மால் இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், இருப்பினும் தாம் மனதளவில் வட்டல் தாமில் இருப்பதைப் போன்று உணர்வதாக கூறினார்.

போற்றுதலுக்குரிய துறவி பாரம்பரியம் இந்தியாவின் சிறப்பாகும் என்றும், கடினமான காலங்களில் ஒரு துறவி அல்லது மகாத்மா எப்போதும் தோன்றியிருக்கிறார் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். பல நூறு ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு, நாடு பலவீனமடைந்து, தன் மீதான நம்பிக்கையை இழந்த நேரத்தில், சுவாமிநாராயணன் வந்துள்ளார் என்று அவர் மேலும் கூறினார். பகவான் சுவாமிநாராயணன் மற்றும் அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து துறவிகளும் ஒரு புதிய ஆன்மீக சக்தியை அளித்தது மட்டுமல்லாமல், நமது சுயமரியாதையை தட்டியெழுப்பி நமது அடையாளத்தை புதுப்பித்தனர் என்றும் திரு மோடி எடுத்துரைத்தார். இந்த திசையில் சிக்ஷ பாத்ரி மற்றும் வசனாம்மிர்தத்தின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும், அவர்களின் போதனைகளை உள்வாங்கி முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். மனிதகுல சேவை மற்றும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவதில், பெரும் பங்களிப்புடன் வட்டல் தாம் ஒரு பெரிய உத்வேகம் அளிப்பது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அதே வட்டல் தாம் வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த சாகரம் ஜி போன்ற சிறந்த சீடர்களை வழங்கியது என்றும் அவர் கூறினார். தற்போது பல குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம், கல்வி ஆகியவை வழங்கப்படுவதுடன், தொலைதூர பழங்குடியினர் பகுதிகளில் சேவைகளும் திட்டங்களும் வட்டல் தாமில் மேற்கொள்ளப்படுவதை திரு மோடி எடுத்துரைத்தார். பழங்குடியினர் பகுதிகளில் பெண் கல்வி போன்ற முக்கியமான இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஏழைகளுக்கு சேவை செய்வது, புதிய தலைமுறையை உருவாக்குவது, நவீனத்தையும் ஆன்மீகத்தையும் இணைத்து, இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பது போன்ற வட்டல் தாமின் பிற சேவைகளை திரு மோடி எடுத்துரைத்தார். தன்னை ஒருபோதும் ஏமாற்றாத வட்டல் தாம் துறவிகள் மற்றும் பக்தர்களை திரு மோடி பாராட்டினார். சிறந்த எதிர்காலத்திற்காக தூய்மை முதல் சுற்றுச்சூழல் வரையிலான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவர்கள் அதை தங்கள் சொந்த பொறுப்பாக ஏற்றுக்கொண்டதாகவும், அதை முழு மனதுடன் நிறைவேற்றுவதில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ், சுவாமிநாராயண் பாரம்பரியத்தைச் சேர்ந்த சீடர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு நோக்கம் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அது ஒருவரின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்றார். இந்த நோக்கம் நமது மனம், செயல் மற்றும் வார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், ஒருவர் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறியும்போது, முழு வாழ்க்கையும் மாறுகிறது என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு சகாப்தத்திலும் துறவிகளும், முனிவர்களும் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளனர் என்று அவர் கூறினார். நமது சமூகத்திற்கு துறவிகள் மற்றும் முனிவர்களின் மகத்தான பங்களிப்பை எடுத்துரைத்த திரு மோடி, ஒரு நோக்கத்தை நிறைவேற்ற ஒட்டுமொத்த சமூகமும் நாடும் ஒன்றிணைந்தால், அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறினார். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். மத நிறுவனங்கள் இன்று இளைஞர்களுக்கு ஒரு பெரிய நோக்கத்தை வழங்கியுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், வளர்ந்த இந்தியா என்ற வரையறுக்கப்பட்ட இலக்குடன் நாடு முழுவதும் முன்னேறி வருகிறது என்றார். வளர்ந்த இந்தியாவின் இந்த புனித நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறு வட்டலின் துறவிகள் மற்றும் ஒட்டுமொத்த சுவாமிநாராயண் குடும்பத்தினரையும் திரு மோடி வலியுறுத்தினார். சுதந்திரப் போராட்டம் பற்றிய குறிப்பை மேற்கோள் காட்டிய பிரதமர், சுதந்திர வேட்கை, சுதந்திரத்தின் தீப்பொறி ஆகியவை நூற்றாண்டு காலமாக சமூகத்தின் பல்வேறு மூலைகளில் உள்ள நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளித்து வந்தன என்றும், மக்கள் தங்கள் சுதந்திர நோக்கங்களை, தங்கள் கனவுகளை, தங்கள் தீர்மானங்களை கைவிடும் ஒரு நாளையோ அல்லது ஒரு கணத்தையோ கடந்து செல்லவில்லை என்றும் கூறினார். சுதந்திர இயக்கத்தில் காணப்பட்ட அதே விருப்பம், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு கணமும் 140 கோடி நாட்டு மக்களுக்கு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். வரும் 25 ஆண்டுகளுக்கு வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையவும், ஒவ்வொரு கணமும் அதனுடன் நம்மை இணைத்துக் கொள்ளவும் மக்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்று அனைத்து துறவிகளையும், சீடர்களையும் அவர் கேட்டுக் கொண்டார். வளர்ந்த இந்தியாவுக்கு ஒவ்வொருவரும் அவர்களின் இடத்தைப் பொருட்படுத்தாமல் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மேலும் வலியுறுத்தினார். வளர்ந்த இந்தியாவுக்கான முதல் நிபந்தனை, அதை தற்சார்பு இந்தியாவாக மாற்றுவதே என்றும், இதை அடைய 140 கோடி இந்திய குடிமக்களைத் தவிர வேறு எந்த வெளிநாட்டவரும் தேவையில்லை என்றும் அவர் கூறினார். உள்ளூர் குரலை ஊக்குவிப்பதன் மூலம் பங்களிக்குமாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீடர்களை திரு மோடி கேட்டுக்கொண்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு மோடி, சமூகத்தை அழிக்க சுயநலவாதிகள் சதி செய்வதாக குறிப்பிட்டார். இதுபோன்ற முயற்சிகளை ஒன்றுபட்ட முறையில் தோற்கடிப்பதற்கான இந்த முயற்சியின் தீவிரத்தை புரிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply