மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சியின் 50 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் நடைபெறும் மாபெரும் மரம் நடும் இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். மேலும், குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன என்றார். அகமதாபாத் நகரம் முழுவதும் 50 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன எனவும் பசுமையான சூழலை உருவாக்குதல், தூய்மையான காற்று, சுத்தமான நீரை உறுதி செய்தல் ஆகியவற்றை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். 1.25 கோடி மரங்களை நடும் இயக்கம் வெறும் முழக்கமாக இருந்து ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கம் விரைவான மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய ஆயுதக் காவல் படைகள், நாடு முழுவதும் ஏழு கோடிக்கும் அதிகமான மரக் கன்றுகளை நட்டுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தில்லியிலும் ஒரு பெரிய அளவிலான மரக் கன்று நடும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். நடப்பட்ட மரஙகள் இந்தியாவின் சூழலியல் நிலைமைகளுக்கு ஏற்ற பூர்வீக மரங்கள் என்றும், 100 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்ட இனங்கள் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு இயக்கமும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்த அவர் தெரிவித்த அவர், ஒவ்வொரு நபரும் ஒரு மரம் நட்டு, எதிர்கால சந்ததியினருக்காக ஓசோன் படலத்தைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார்.
எஸ் . சதிஷ் சர்மா
