நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் நடைபெற்ற “கியா ஓரா மோடி” என்ற நிகழ்வில், நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 10,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் அரவணைப்பு, ஆற்றல், உற்சாகத்தால் இக்கூட்டம் நிறைந்திருந்தது.

நியூசிலாந்து பிரதமர் திரு லக்ஸன் இதில் பங்கேற்றதற்கும், இந்திய சமூகத்தின் நலனுக்காக அவர் அளிக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையைத் தொடங்கினார். நியூசிலாந்தில் உள்ள இந்திய சமூகம் தமக்கு அளித்த சிறப்பு வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சியின் மூலம், இந்திய சமூகம் நியூசிலாந்தின் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து, ஒரு ஆற்றல்மிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது என்றார். இந்திய சமூகத்தினர் தங்கள் கலாச்சாரம், விழாக்கள், மரபுகளைப் பாதுகாத்து, நியூசிலாந்தின் பன்முக கலாச்சாரக் கட்டமைப்பை வளப்படுத்தியதற்காக பிரதமர் அவர்களைப் பாராட்டினார். குறிப்பாக, தன்னார்வத் தொண்டு, தர்மம், சமூக நலன் ஆகியவற்றில் இந்தியச் சமூகத்தின் முன்மாதிரியான சாதனைகளைக் குறிப்பிட்டு, அவர்களின் தன்னலமற்ற சேவை உணர்வைப் பாராட்டினார்.

இந்தக் கூட்டம் இந்தியப் வம்சாவழியினருக்கானதாக இருந்தாலும், இது உண்மையில் இந்தியா-நியூசிலாந்து நட்புறவு, விளையாட்டுத் தொடர்புகள், அவற்றின் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றின் கொண்டாட்டமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். 2026-ம் ஆண்டு, இரு நாடுகளின் விளையாட்டு ஒத்துழைப்பில் 100-வது ஆண்டு என்பதைக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளும் தங்களது விளையாட்டுத் தொடர்புகளை மேலும் ஆழப்படுத்த ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார். உள்ளூர் மாவோரி கலாச்சாரத்தின் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான அணுகுமுறையைப் பாராட்டிய அவர், இந்தியாவும் பாரம்பரியத்தை வளர்ச்சியுடன் இணைக்கும் ஒரு வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நட்பு, நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் பாலமாகத் தொடர்ந்து பணியாற்றி, இரு நாடுகளின் நலனுக்காக இந்த உத்திசார் ஒத்துழைப்பின் முழு ஆற்றலையும் வெளிக் கொண்டுவர உதவுமாறு இந்திய சமூகத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

Leave a Reply