ஹரியானாவின் ராகிகர்ஹி தொல்லியல் தளத்தில் இருந்து அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் விரிவான அறிவியில் ஆய்வுக்காக, இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனமான இந்திய மானுடவியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சிந்து – சரஸ்வதி நாகரிகத்தின் மிக முக்கியமான நகர்ப்புற மையங்களில் ஒன்றைக் குறித்து பல்துறை ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று இந்திய மானுடவியல் ஆய்வக இயக்குனர் பேராசிரியர் பிவி ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் சுமார் 550 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ராகிகர்ஹி சிந்து – சரஸ்வதி நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்பு பகுதியாக அங்கீகரிக்கப்படுகிறது. திட்டமிடப்பட்ட குடியிருப்புகள், வடிகால் முறைகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மையங்கள், வர்த்தகக் கட்டமைப்புகள், அடக்கம் செய்யும் இடங்கள் உள்ளிட்ட தொடக்க கால ஹரப்பா காலம் முதல் கடைசிகால ஹரப்பா காலம் வரையிலான தொடர்ச்சியான மனிதக் குடியிருப்புகளுக்கான சான்றுகளை தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் அகழ்வாராய்ச்சி பிரிவு நடத்திய ஆய்வின்போது, முன்பு அடக்கம் செய்யும் இடங்களாக காணப்பட்ட மேடு எண் 7-ல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எட்டு அடக்கம் செய்யும் இடங்களை கண்டறிந்தனர்.
திவாஹர்
